கோரிக்கை பதிவு

கடலூரில் கடல் உள்வாங்கியது: படகுப் போக்குவரத்தில் சிரமம்

கடலூரில் சனிக்கிழமை திடீரென கடல் உள்வாங்கியது. இதனால் கடலூரில் மீன்பிடிப் படகுகள் கடலுக்குள் சென்றுவருவதில் சிரமம் ஏற்பட்டது. சுனாமிக்குப் பிறகு கடலூர் மாவட்டக் கடல் பகுதிகளில் தொடர்ந்து மாற்றங்கள் நிகழ்ந்து வருவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். கடலில் நீரோட்டங்களிலும் ஏற்படும் பல மாற்றங்களை மீனவர்கள் சந்திக்க நேரிடுகிறது. இதனால் மீன்பிடித் தொழில் அடிக்கடி பாதிப்புக்கு உள்ளாகிறது. கடலில் ஏற்படும் மாற்றங்களால் கடலூர் மாவட்டத்தில் மீன் வரத்து வெகுவாகக் குறைந்து வருகிறது. இதனால் மீன் பற்றாக்குறையும், விலை ஏற்றமும் மீன் உணவை விரும்புவோரிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. கடல் உள்வாங்கியது குறித்து, தமிழ்நாடு மீனவர் பேரவை கடலூர் மாவட்டத் தலைவர் சுப்புராயன் கூறுகையில், சுனாமிக்குப் பிறகு வங்கக் கடலில் இத்தகைய மாற்றங்கள் மிகச் சாதாரணமாகி விட்டது. கடந்த இரு நாள்களாக கடல் உள்வாங்கிக் காணப்படுகிறது. இன்னும் 2 மாதங்களுக்கு இந்த மாற்றங்கள் அடிக்கடி நிகழும் என்று எதிர்பார்க்கிறோம். இதனால் மீன்பிடித் தொழிலில் தற்போதைக்கு பெரிய மாற்றம் எதுவும் இல்லை. கடலூர் துறைமுகத்தின் முகத்துவாரம் தூர்ந்து கிடப்பதால், கடல் உள்வாங்கி இருக்கும் நேரங்களில், மீன்பிடிப் படகுகள் கடலுக்குள் சென்றுவருவது சிரமமாக இருக்கிறது. மீன் பிடித்துவிட்டு படகுகள் கரை திரும்பும்போது, கடல் உள்வாங்கி விட்டால், படகை கடலில் நங்கூரம் போட்டு நிறுத்தி விடுவோம். அங்கேயே காத்து இருந்து, பின்னர் கடல் மட்டம் உயரும் போதுதான், படகுகள் கரைக்குத் திரும்பும். கடல் உள்வாங்கி இருக்கும் நேரங்களில் அதைப் பொருள்படுத்தாமல் சிலர், கடலுக்குள் செல்லவோ, கரை திரும்பவோ நேரிடும்போது, படகுகள் சேதம் அடைந்து, பெருத்த நஷ்டம் ஏற்பட்டு விடுகிறது. பின்னர் அந்தப் படகு உரிமையாளர் வேறு படகுகளில் கூலிக்கு மீன்பிடிக்கச் செல்வார்கள் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக