கோரிக்கை பதிவு

மீனவர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மீனவர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கடலூரில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

கடலூரில் மீனவர்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.தொழிற்சாலைகளின் ரசாயனக் கழிவுகள் கடலில் கலப்பது,​​ கடலூர் சிங்காரத்தோப்பு பகுதியில் கட்டப்பட்ட சுனாமி வீடுகள் கட்டுமானத்தில் நடந்துள்ள முறைகேடுகளைச் சுட்டிக் காட்டியும் நடவடிக்கை எடுக்காதது,​​ ​ சிங்காரத்தோப்பு உள்ளிட்ட மீனவர் கிராமங்களில் மீனவர்களின் வீடுகளைக் காலி செய்ய வற்புறுத்துவது,​​ சுனாமி பாதித்த சில பகுதி மக்களுக்கு இன்னமும் வீடுகள் கட்டிக் கொடுக்காதது ஆகியவற்றைக் கண்டித்தும்,​​ மாவட்டம் முழுவதும் கட்டப்பட்ட வரும் சுனாமி வீடுகளின் தரத்தைக் ஆய்வுசெய்ய வேண்டும்,​​ கடல் அரிப்பைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கம் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்து இருந்தது.​ மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ​ ​ மண்டல ஒருங்கிணைப்பாளர் ஆ.ஜெயராமன் தலைமை தாங்கினார்.மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.கங்காதரன் வரவேற்றார்.​ மீனவர் பாதுகாப்பு பேரியக்க மாநில பொதுச் செயலர் செல்வ.ஏழுமலை,​​ குடிமக்கள் இயக்க பொறுப்பாளர்கள் தேவராஜ்,​​ ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வடக்கு மண்டல ஆலோசகர் பி.ஜே.அமலதாஸ்,​​ ​ தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச்செயலர் எம்.நிஜாமுதீன்,​​ பயிற்சி இயக்குநர் சி.ஏ.தாஸ்,​​ தமிழ்தேசிய விடுதலைப் பேரவை மாநில துணைச் செயலர் திருமார்பன்,​​ நுகர்வோர் கூட்டமைப்பின் ஆலோசகர் கவிஞர் பால்கி,​​ வழக்கறிஞர் கோ.மன்றவாணன்,​​ வெண்புறா பேரவைத் தலைவர் சி.குமார்,​​ தமிழர் கழக மாவட்ட அமைப்பாளர் கு.பரிதிவாணன் உள்ளிட்ட பலர் பேசினர்.​ ஆர்.சந்திரன் நன்றி கூறினார்.

கடலூரில் கடல் உள்வாங்கியது: படகுப் போக்குவரத்தில் சிரமம்

கடலூரில் சனிக்கிழமை திடீரென கடல் உள்வாங்கியது. இதனால் கடலூரில் மீன்பிடிப் படகுகள் கடலுக்குள் சென்றுவருவதில் சிரமம் ஏற்பட்டது. சுனாமிக்குப் பிறகு கடலூர் மாவட்டக் கடல் பகுதிகளில் தொடர்ந்து மாற்றங்கள் நிகழ்ந்து வருவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். கடலில் நீரோட்டங்களிலும் ஏற்படும் பல மாற்றங்களை மீனவர்கள் சந்திக்க நேரிடுகிறது. இதனால் மீன்பிடித் தொழில் அடிக்கடி பாதிப்புக்கு உள்ளாகிறது. கடலில் ஏற்படும் மாற்றங்களால் கடலூர் மாவட்டத்தில் மீன் வரத்து வெகுவாகக் குறைந்து வருகிறது. இதனால் மீன் பற்றாக்குறையும், விலை ஏற்றமும் மீன் உணவை விரும்புவோரிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. கடல் உள்வாங்கியது குறித்து, தமிழ்நாடு மீனவர் பேரவை கடலூர் மாவட்டத் தலைவர் சுப்புராயன் கூறுகையில், சுனாமிக்குப் பிறகு வங்கக் கடலில் இத்தகைய மாற்றங்கள் மிகச் சாதாரணமாகி விட்டது. கடந்த இரு நாள்களாக கடல் உள்வாங்கிக் காணப்படுகிறது. இன்னும் 2 மாதங்களுக்கு இந்த மாற்றங்கள் அடிக்கடி நிகழும் என்று எதிர்பார்க்கிறோம். இதனால் மீன்பிடித் தொழிலில் தற்போதைக்கு பெரிய மாற்றம் எதுவும் இல்லை. கடலூர் துறைமுகத்தின் முகத்துவாரம் தூர்ந்து கிடப்பதால், கடல் உள்வாங்கி இருக்கும் நேரங்களில், மீன்பிடிப் படகுகள் கடலுக்குள் சென்றுவருவது சிரமமாக இருக்கிறது. மீன் பிடித்துவிட்டு படகுகள் கரை திரும்பும்போது, கடல் உள்வாங்கி விட்டால், படகை கடலில் நங்கூரம் போட்டு நிறுத்தி விடுவோம். அங்கேயே காத்து இருந்து, பின்னர் கடல் மட்டம் உயரும் போதுதான், படகுகள் கரைக்குத் திரும்பும். கடல் உள்வாங்கி இருக்கும் நேரங்களில் அதைப் பொருள்படுத்தாமல் சிலர், கடலுக்குள் செல்லவோ, கரை திரும்பவோ நேரிடும்போது, படகுகள் சேதம் அடைந்து, பெருத்த நஷ்டம் ஏற்பட்டு விடுகிறது. பின்னர் அந்தப் படகு உரிமையாளர் வேறு படகுகளில் கூலிக்கு மீன்பிடிக்கச் செல்வார்கள் என்றார்.

மாயமான மீனவர்களில் மூவர் கரை திரும்பினர் : மற்றொரு மீனவரை தேடும் பணி தீவிரம்

மீன் பிடிக்க சென்று, காணாமல் போன மூன்று மீனவர்கள் நேற்று கரைக்கு திரும்பினர். மற்றொரு மீனவரை தேடும் பணி நடந்து வருகிறது.
லைலா புயல் காரணமாக, பலத்த காற்று வீசும் என்பதால், தூத்துக்குடியில், 2,300 நாட்டுப் படகுகள், நேற்று கடலுக்கு செல்லவில்லை. கடலூர் தேவனாம்பட் டினத்தை சேர்ந்த சுப்பிரமணியன் (60), அவரது மகன் ஆனந்தன் (26), பூபாலன் (23) ஆகிய மூவரும், கடந்த 18ம் தேதி, பைபர் படகில் மீன் பிடிக்கச் சென்றனர். இதேபோல், சகாய ராஜ் என்பவர் மீன்பிடிக்க தனியாக சென்றார். இவர்கள், நேற்று முன்தினம் மதியம் 3 மணி வரை, கரை திரும்பவில்லை. அவர்களிடமிருந்து எந்த தகவலும் வராததால், உறவினர்கள் அச்சமடைந்தனர். தகவலறிந்த கடலோர பாதுகாப்பு படை யினர், அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் இரவு, ஆழ்கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிரெட்ஜரில் அவர் கள் தஞ்சமடைந்தனர். கரைக்கு திரும்பிய மீன வர்கள் கூறுகையில், "புயல் எச்சரிக்கை விடுவதற்கு முன்பாகவே கடலுக்கு சென்றுவிட்டோம். இன்ஜின் பழுதானதால் கரைக்கு திரும்ப முடியவில்லை. மூன்று பேரும் மொபைல் போன் எடுத்து செல்லாததால், நாங்கள் கடலில் தத்தளித்ததை, தெரிவிக்க முடியவில்லை. நாங்களே இன்ஜினை பழுதுபார்த்து கரைக்கு திரும் பும் முயற்சியில் ஈடுபட் டோம். ஆனால் முடியவில்லை. வேறுவழியின்றி டிரெட்ஜரில் தஞ்சமடைந் தோம்' என்றனர்.

கடலூர்: மீன்பிடி ​ தடைக்காலம் தொடங்கியது

கடலூர் மாவட்டத்தில் மீன்பிடித் தடைக்காலம் புதன்கிழமை நள்ளிரவு முதல் தொடங்கியது.

ஏப்ரல் 15 முதல் மே 29-ம் தேதிவரை 45 நாள்கள் மீன்பிடிக்க கடந்த 9 ஆண்டுகளாகத் தடை விதிக்கப்பட்டு வருகிறது.​ இந்தத் தடைகாலத்தில் ​ இழுவை வலைகளை பயன்படுத்தும் இயந்திரப் படகுகள் மீன்பிடிக்கக் கூடாது.​ ​

கடலூர் மாவட்டத்தில் இத்தகைய மீன்படிப் படகுகள் சுமார் 700 உள்ளன.​ இவைகளுக்கு மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டு உள்ளது சாதாரண படகுகள் மட்டுமே தற்போது மீன்பிடிக்க முடியும்.​ ஏப்ரல் 15 முதல் மே கடைசி வரை மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலம்.​ எனவே கடலில் மீன் வளம் தொடர்ந்து பாதுகாக்கப்பட இவ்வாறு மீன்பிடி தடை விதிக்கப்படுவதாக அரசு தெரிவிக்கிறது.


பொதுவாகவே கடல் வளம் குறைந்து வருவதாக மீனவர்கள் தெரிவிக்கிறார்கள்.​ கடலூர் மாவட்டத்தில் சுனாமிக்குப் பிறகு கடலில் மாற்றங்கள் ஏற்பட்டு,​​ மீன்கள் பிடிபடுவது மிகவும் குறைந்து விட்டதாக மீனவர்கள் கூறுகின்றனர்.​ கரையில் இருந்து 5 கி.மீ.​ தூரத்துக்குள் பெரும்பாலும் மீன்கள் கிடைப்பது இல்லை என்றே அவர்கள் கூறுகிறார்கள்.

இதனால் சாதாரண கண்ணாடி இழைப் படகுகள் மற்றும் கட்டுமரங்களைக் கொண்டு மீன் பிடிப்பது இனி இயலாத காரியம் என்ற கருத்து மேலோங்கி வருகிறது.

இந்நிலையில் இழுவை வலைகளை பயன்படுத்தும் பெரிய படகுகள் மீன்பிடிக்கத் தடை விதிப்பது,​​ ஒட்டுமொத்த மீனவர்களுக்கும் தடை விதிப்பதாகவே உள்ளதாக மீனவர்கள் கருதுகிறார்கள்.

இதுகுறித்து மீனவர் பேரவை கடலூர் மாவட்டத் தலைவர் சுப்புராயன் கூறியது:

அரசு உத்தரவுப்படி கடலூர் மாவட்டத்தில் இழுவை வலைகளை பயன்படுத்தும் 700 இயந்திரப் படகுகள் மீன்பிடிக்க இயலாது.​ ஆனால் இந்த இயந்திரப் படகுகளுடன் இணைந்து மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் கண்ணாடி இழைப் படகுகள் 2 ஆயிரம் உள்ளன.​ மீன்படித் தடைகாலத்தில் இந்த 2 ஆயிரம் படகுகளுக்கும் அவைகளை நம்பி இருக்கும் தொழிலாளர்களுக்கும் வேலை இல்லை.

இந்த ஆண்டு பொதுவாகவே மீன்கள் கிடைப்பது மிகக்குறைவாக இருந்தது.​ புவி வெப்பம் அதிகரிப்பு காரணமாக பூமியில் மட்டுமன்றி கடலிலும் மாற்றம் ஏற்பட்டு உள்ளது.​ சீசன்கள் மாறியிருக்கின்றன.

ஒரு மாதமாகத்தான் மீன்கள் கிடைத்துக் கொண்டு இருந்தன.​ தற்போது அதிகமாக மீன்கள் கிடைக்கும் காலம்.​ இந்த நேரத்தில் தடை விதித்து இருப்பது முறையாகத் தெரியவில்லை.

கடலூர் மாவட்ட எல்லை நெடுகிலும் ஆழ்கடலில் தைவான்,​​ நார்வே,​​ பர்மா,​​ மலேசியா போன்ற வெளிநாடுகளின் மீன்பிடிக் கப்பல்கள் எந்தத் தடையுமின்றி மீன்பிடித்துக் கொண்டு இருக்கின்றன.​ அந்தக் கப்பல்களுக்கும் மீன்பிடிக்கத் தடை விதிக்க வேண்டும்.​ இல்லையேல் தமிழக மீனர்களுக்கு மட்டும் விதிக்கப்படும் இந்தத் தடை,​​ பன்னாட்டு மீன்பிடி நிறுவனங்களுக்கு சாதகமாக எடுத்த முடிவாகத்தான் அமையும் என்றார்.

15-ம் தேதி முதல் 45 நாள்கள் விசைப்படகுகள் மீன்பிடிக்கத் தடை

வரும் 15-ம் தேதி முதல் 45 நாள்களுக்கு விசைப் படகுகள், கடலில் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது. கடலூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இந்தத் தடை அமுலில் இருக்கும்.சென்னை, கடலூர், நாகை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட 14 மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான குடும்பங்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு உள்ளன. கடல்தான் இவர்களின் வாழ்வாதாரம். ஆயிரக்கணக்கான விசைப் படகுகள், சிறிய படகுகள், கட்டுமரங்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றன.  பெரிய படகுகள் சுருக்கு வலை, இரட்டைமடி வலை, கொல்லிமடி வலை உள்ளிட்ட பல்வேறு வகையான மீன் வலைகளைப் பயன்படுத்துகின்றன. இதனால் சிறிய மீன்கள் முதல் பெரிய மீன்கள் வரை, பெருமளவுக்கு மீன்கள் பிடிக்கப்பட்டு விடுகின்றன. எனவே கடல் மீன் வளம் தொடர்ந்து பாதுகாக்கப்படவும், மீனவர்களுக்கு பரவலாக பல மாதங்கள் மீன் கிடைக்கவும், ஏப்ரல் 15-ம் தேதி முதல் 15 நாள்கள் விசைப் படகுகள் மீன்பிடிக்க அரசு தடை விதிக்கிறது.  மேலும் ஏப்ரல், மே மாதங்கள்தான் மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலங்கள் என்று கூறப்படுகிறது. இந்த நாள்களில் உற்பத்தியாகும் மீன் குஞ்சுகளையும் பிடித்து விட்டால், மற்ற நாள்களில் மீன்கள் கிடைப்பது அரிதாகிவிடும் என்று கருதப்படுவதால் மேற்கண்ட நாள்களில் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது. ஆனால் சிறிய படகுகள் மற்றும் கட்டுமரங்களுக்குத் தடையில்லை. கடந்த 7 ஆண்டுகளாக இந்தத் தடை விதிக்கப்பட்டு வருகிறது. இதற்கு மீனவர்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு அளித்து வருகிறார்கள். மீன்பிடித் தடைக் காலத்தில் பாதிக்கப்படும் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மீன்பிடி தடைக் காலத்தில் குடும்பத்துக்கு ரூ.500 வீதம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் சுமார் 30 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.இந்த நிவாரணத் தொகையை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று, தமிழ்நாடு மீனவர் பேரவையின் கடலூர் மாவட்டத் தலைவர் சுப்புராயன் அரசுக்குக் கோரிக்கை விடுத்து உள்ளார். அவர் மேலும் கூறியது: கடலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை சென்ற ஆண்டு முழுவதும் மீன்கள் சரியாகக் கிடைக்கவில்லை. கரையோரப் பகுதிகளில்தான் மீன்கள் அதிகம் உற்பத்தி ஆகின்றன. ஆனால் கடற்கரைகளில் பெருகிவரும் ரசாயனத் தொழிற்சாலைகளால், கடலில் பெருமளவுக்கு கழிவுகள் கலக்கின்றன. இதனால் மீன்வளம் பாதிக்கப்படுகிறது. மீன்கள் கிடைப்பது அரிதாகி, மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்றார் சுப்புராயன்.

கடற்கரைப் பகுதிகளில் தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு

கடற்கரைப் பகுதிகளில் தொழிற்சாலைகள் அமைக்க தடை விதிக்க வேண்டும் என்று,​​ தமிழ்நாடு மற்றும் புதுவை மாநில மீனவர் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.​ ​கூட்டமைப்பின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் கடலூரில் வெள்ளிக்கிழமை நடந்தது.​ கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:​ மீனவர்களின் வாழ்வுரிமை பாதுகாக்கப்பட வேண்டும்.​ மீனவர்களுக்கு எதிராக அரசுகளால் இயற்றப்படும் சட்டங்களை கூட்டமைப்பு எதிர்க்கும்.​ கடற்கரை மற்றும் உள்நாட்டு நீர்நிலைகளில் தொழிற்சாலைகளை அமைக்கக் கூடாது.​ மீனவர்களை மலைவாழ் மக்களுடன் இணைத்து இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்.​ மக்கள் தொகை அடிப்படையில் மத்திய,​​ மாநில அரசுகளின் நிதிநிலை அறிக்கைகளில் மீனவர்களுக்கு நிதி ஒதுக்க வேண்டும்.​ மத்திய அரசில் மீன்வளத் துறைக்கு தனி அமைச்சகம் ஏற்படுத்த வேண்டும்.​ மே 9-ம் தேதி கடலூரில் மாநில மாநாடு நடத்துவது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்துக்கு அனைத்து மீனவர் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் ஜி.ஆர்.அப்பாராஜ் தலைமை வகித்தார்.​ ஆர்.கன்னியப்பன்,​​ சுப்புராயன்,​​ ஏழுமலை, பாலு ​ஆகியோர் முன்னிலை வகித்தனர்.​ ஜேபியார் பேரவைத் தலைவர் கனகராஜ் வரவேற்றார்.​ ​அகில இந்திய மீனவர் சங்க துணைத் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட பலர் பேசினர்.

200 மீட்டர் சாலை அமைக்கவில்லை

கடலூர் அருகே மீனவ கிராமமான சித்திரைப்பேட்டையிலிருந்து பரங்கிப்பேட்டை வரை கடலோரப்பாதை உள்ளது. தற்போது இந்த பாதை தைக்கால்தோணித்துறையில் இருந்து தொடங்கி சொத்திக்குப்பம், ராஜாப்பேட்டை, சித்திரைப்பேட்டை, தம்மணாம்பேட்டை, நாயக்கர்பேட்டை, நஞ்சலிங்கம்பேட்டை, பெரியக்குப்பம், பேட்டைநகர், அய்யம்பேட்டை, மானியார்பேட்டை, அன்னப்பன்பேட்டை,ரெட்டியார்பேட்டை, மடவாய்பள்ளம், குமாரப்பேட்டை, சாமியார்பேட்டை, புதுக்குப்பம், இந்திராநகர், புதுப்பேட்டை, சின்னூர் வடக்கு மற்றும் தெற்கு சலங்கைகாரத் தெரு ஆரியநாட்டு சலங்குகார தெரு வழியாக பரங்கிப்பேட்டை வரை செல்கிறது.
தற்போது இந்த பாதை யில் சித்திரப்பேட்டையில் இருந்து தம்மணாம்பேட்டை வரையில் உள்ள ஒன்றரை கி.மீ தூர சாலை அமைக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்ட 200 மீட்டருக்கு சாலை முற்றிலும் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் தம்மணாம்பேட்டையில் இருந்து சித்திரைப்பேட்டை வரையிலான கிராம மக்கள் சுமார் 15 கி.மீ வரை சுற்றி வரும் அவல நிலை உள்ளது.
குறிப்பிட்ட அந்த 200 மீட்டருக்கு சாலை அமைப் பது தொடர்பாக தமிழ்நாடு மீனவர் பேரவை மாவட்டத் தலைவர் சுப்புராயன் தலைமையில் செயலாளர் முருகன், சித்திரைப்பேட்டை தலைவர் புஷ்பலிங்கம், துணைத் தலைவர் சுப்புராயன், செயலாளர் அன்பு, பொருளாளர் முரளி, தம்மணாம்பேட்டை தலைவர் பாஸ்கரன், துணைத் தலைவர் ராமச்சந்திரன், செயலாளர் ஹரி, பொருளாளர் ஆறுமுகம் மற்றும் இரு கிராம பஞ்சாயத்து நிர்வாகிகளும் கடலூர் மாவட்ட ஆட்சியர் சீத்தாராமனிடம் மனு அளித்தனர்.
குறிப்பிட்ட 200 மீட்டர் தூரத்துக்கு சாலை அமைக்கப்படாததால் பொதுமக் கள், மாணவர்கள், பணிக்குச் செல்வோர் 15 முதல் 20 கி.மீ தூரம் சுற்றிச் செல்லவேண்டியிருக்கிறது.
இதனால் கடலூர் சிதம்பரம் சாலையில் போக்கு வரத்து நெருக்கடியும் விபத்துகளும் ஏற்படுகிறது. கடலோரச் சாலை எந்த நோக்கத்திற்காக அமைக்கப்பட்டதோ அது நிறைவேறாமல் உள்ளது. குறிப்பிட்ட 200 மீட்டர் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமானதாகும். அந்த நிறுவனத்திடம் பேசி 200 மீட்டருக்கு சாலை அமைத்து தந்து கடலோர கிராம மக்களின் அவல நிலையை போக்க வேண்டும், என மனுவில் கூறியுள்ளனர்.
15 கி.மீ சுற்றி செல்ல வேண்டிய நிலை. சாலை அமைத்து தர
ஆட்சியரிடம் மீனவர்கள் மனு

நம்மவர்களையே அடித்த கடலோரக் காவல்படை! -கசந்துபோன கடலூர் மீனவர்கள்

நம்மவர்களையே அடித்த கடலோரக் காவல்படை!
-கசந்துபோன கடலூர் மீனவர்கள்

கடலுக்குள் 25 கிலோ மீட்டரை கடந்து மீன் பிடிக்கக் கூடாது என்ற புதிய சட்டம் வரப்போகிறதாம். இந்த மீன்பிடி மசோதாவை சட்டமாக்க மத்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இந்த மசோதா மீனவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று ஆந்திர, கேரள மீனவர்கள் எதிர்ப்புக்குரல் எழுப்பியதைத் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி இருக்கிறது மீன்பிடி மசோதா.


இந்த நிலையில், கடந்தவாரம் கடலூர் மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்ல, ‘25 கிலோ மீட்டர் தாண்டி ஏன் வந்தீர்கள்?’ என்று கேட்ட கடலோரக் காவல்படையினர் அவர்களை அடித்து அவர்களின் படகையும் சேதப்படுத்தினர். இச்சம்பவத்துக்குப் பிறகு வெடவெடத்துக் கிடக்கிறார்கள்.

25 கிலோ மீட்டர் கடந்து மீன்பிடிக்கக் கடலுக்குள் செல்லக் கூடாது என்பது மீன்பிடி மசோதாவின் ஓர் அங்கம். இதைக் கண்டித்தும், தாக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கவும், மீனவர்களை சுதந்திரமாகச் செயல்பட வலியுறுத்தியும் கடலூர் மாவட்ட மீனவ அமைப்புகளான ‘விடுதலை மீனவ வேங்கைகள்,’ ‘வீரவிடுதலை வேங்கைகள்’, ‘மீனவர் விடுதலை வேங்கைகள் இயக்கம்’ உள்ளிட்ட அமைப்புகள் கண்டன போஸ்டர், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என போராட்டத்தில் குதித்துள்ளன.

கடலோரக் காவல் படையினரால் தாக்கப்பட்ட மீனவர் முருகனை சந்தித்தோம்.

“போனவாரம் சாயங்காலம் மூணு மணிக்கு அஞ்சு படகுல தொழிலுக்குப் போனோம். முப்பது கிலோ மீட்டர் போய் வலையை விரிச்சோம். அப்போ, எங்ககிட்ட வந்து நின்ன ஒரு கப்பலிலிருந்து வெள்ள டிரெஸ் போட்ட ஆபீசருங்க அஞ்சு பேர் வந்தாங்க.

நாங்க இருந்த படகுலயே இறங்கிட்டாங்க. எங்ககிட்ட வந்து துப்பாக்கிய காட்டி மிரட்டினாங்க. எவ்ளோ சொல்லியும் கேட்காம எங்களை அடிச்சாங்க. ‘அடையாள அட்டை கொடு’ என்று கேட்டார்கள். எங்கக்கிட்ட இல்லை. அதுக்குள்ள படகுல இருந்த வலையை எல்லாம் சேதப்படுத்திட்டாங்க.

அவங்களுக்குப் பயந்து நாங்க கரைக்குத் திரும்பிட்டோம். மீன்வளத்துறை தனி அதிகாரி அப்பர்கிட்ட இதுபற்றிச் சொன்னோம். அவர் எங்கக்கிட்ட புகார் எழுதி வாங்கிக்கிட்டாரு. 15 வருஷமா தொழில் செய்யறோம். இதுபோல நடந்ததேயில்லை. இது எங்களுக்குப் புதுசா இருக்கு. அதனால தொழிலுக்குப் போகவே பயமா இருக்கு.

இதுசம்பந்தமா கலெக்டரை போய்ப் பார்த்து சொன்னோம். அவரும் எங்க ஊருக்கு வந்து சமாதானம் சொல்லிட்டு, விசாரிக்கறதா சொல்லியிருக்காரு. இதுக்கு ஒரு தீர்வு வராம கடலுக்குப் போறதில்லைன்னு முடிவு பண்ணியிருக்கோம். ஒருவாரமா தொழிலுக்குப் போகலை” என்றார் சோகத்தோடு.

இவரைத் தொடந்து ஊர்ப் பிரமுகரான சாமிநாதனிடம் பேசினோம்.

“கடலம்மாவை நம்பி எங்க ஊருல 700 குடும்பங்கள் இருக்கு. ஆனா இந்தக் கடலோரக் காவல்படை போலீஸ்காரங்க திடீர்னு முரட்டுத்தனமாத் தாக்கியிருக்காங்க. கேட்டா, ‘25 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல வராதீங்க’ன்னு சொல்றாங்க.

ஆழமான பகுதியிலதான் வெலை உசந்த மீன்கள் கிடைக்கும். இதையே நம்பி வாழும் எங்களை இதைச் செய்யாதீங்க.. அதைச் செய்யாதீங்கன்னு சொன்னா எப்படி? இதுவரைக்கும் மீன்பிடிக்க எந்தச் சட்டதிட்டமும் எங்களுக்கு இருந்ததில்லை. இப்பதான் ஏதோ புதுசா சொல்றாங்க.

படகுல இத்தனை பேருதான் போகணும்னு வரைமுறைப் படுத்துறாங்க. இதுசம்பந்தமா எங்களுக்கு எந்தத் தகவலும் சொல்லலை. இவங்களா ஒரு சட்டத்தை வச்சிக்கிட்டு எங்களை வஞ்சிக்கிறாங்க. செல்வநாதன், கோபி, அமிர்தலிங்கம், கார்த்திகேயன், ஆறுமுகம், மனோகரன், முருகன்னு மீன்பிடிக்கப் போன பலரையும் அடிச்சி அவங்க படகையும் சேதப்படுத்தி வலையையும் அபகரிச்சிக்கிட்டாங்க. இதற்கான நிவாரணத்தை உடனடியா வழங்க மாவட்ட நிர்வாகம் முன்வரணும். ‘நீங்க எல்லாம் உடனே அடையாள அட்டை வாங்கிக்கணும்னு சொல்லுறாரு கலெக்டரு. தொழிலுக்குப் போற நாங்க உயிரையே கையில பிடிச்சிட்டு போய்வர்றோம். இதுல அடையாள அட்டையை எங்க பாதுகாக்கிறது” என்றார்.

இதுகுறித்து கடலூர் மாவட்ட கலெக்டர் சீத்தாராமனைச் சந்தித்து விளக்கம் கேட்டோம். “இப்படி ஒரு சம்பவம் இதுதான் முதன்முறை. இது சம்பந்தமாகக் கடலோரக் காவல் படை அதிகாரிகளிடம் பேசினேன். ‘இனிமேல் இப்படி ஒரு தவறு நடக்காது’ என்று உறுதியளித்திருக்கிறார்கள். மாவட்ட நிர்வாகம் சார்பாக அடையாள அட்டைகள் வழங்கும் பணி தொடங்கியுள்ளோம். இனிமேல் இவங்க தொழிலுக்குப் போகும்போது அடையாள அட்டை மற்றும் அவர்கள் பயன்படுத்தும் படகு சம்பந்தமான சான்றிதழ் நகல்களை எடுத்துச் செல்லவேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறோம். இவற்றை உரிய முறையில் பாதுகாப்பாக எடுத்துச் சென்று மீனவர்களும் எங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்” என்றார்.

இதுகுறித்து தொகுதி எம்.எல்.ஏ. ஐயப்பனிடம் பேசினோம்.

“இந்தச் சம்பவம் கேள்விப்பட்ட உடனே விசாரிக்கத் தொடங்கினேன். எப்போதும்போல கடலோரக் காவல் படையினர் மீனவர்களை விசாரணை செய்வது வழக்கம். அப்போது இந்த மீனவர்களிடம் எந்த ஆதாரமும் இல்லாததால் இவர்களைத் தாக்கியிருக்கிறார்கள். உடனே அதுசம்பந்தமான அதிகாரிகளிடம் பேசினேன். அதில் சிங் என்ற உயர் அதிகாரி ஒருவர் இந்தச் சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர், எஸ்.பி. உள்ளிட்டோரை அழைத்துச் சென்று அந்த ஊரில் சமாதானக் கூட்டம் போட்டு அவர்களை மீண்டும் தொழிலுக்குப் போகும்படி வலியுறுத்தி உள்ளேன். விரைவில் தொழிலுக்குச் செல்வார்கள் என நம்புகிறேன்” என்றார் ஐயப்பன்.

இப்போதே மீனவர்களுக்கு உள்ளூர் போலீஸ், கடலோரக் காவல்படை, கடற்படை என மூன்றடுக்குத் தொல்லை இருக்கிறது. இந்நிலையில் இந்திய அரசு கொண்டுவரப் போகும் இந்தப் புதிய மசோதா, மீனவர்களை மேலும் துன்பத்தில் ஆழ்த்தும் என்பதில் ஐயமில்லை.

கடல்சார் மீன்பிடி மசோதாவை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் மீனவர் பேரவை தலைவர் அறிவிப்பு

மீனவர் களை பாதிக்கும் கடல்சார் மீன் பிடி ஒழுங்கு முறை மசோதாவை எந்த வடிவத்திலும் தமிழ்நாட்டிற் குள் அனுமதிக்க மாட் டோம் என்று தமிழ்நாடு மீனவர் பேரவைத் தலைவர் அன்பழகன் பேசினார்.
கடல்சார் மீன்பிடி ஒழுங்கு முறை மசோ தாவை எதிர்த்து 17 ம் தேதி டில்லியில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. மாநில அரசுகளையும் மீனவர் அமைப்பின் பிரதிநிதி களை கலந்து பேசிய பிறகே மசோதா குறித்து முடிவெடுக்க வேண்டும் என்று முதல்வர் கருணா நிதி மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். இந்நிலையில் மசோதாவை தற்காலிகமாக கைவிடுவதாகவும் கடலோர மாநில அரசுகளையும் மீனவர் அமைப்புகளை கலந்து ஆலோசித்த பிறகே முடிவெடுப்போம் என்று மத் திய அரசு அறிவித்தது.
இதனை தொடர்ந்து தமிழ்நாடு மீனவர் பேரவை டில்லியில் நடத்தவிருந்த கண்டன ஆர்பாட்டத்தை கைவிட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு தயா ராக அனைத்து ஏற்பாடுகளையும் செய்த மீனவர் கிராம மக்களை நேரில் சந்தித்து நன்றி கூறுவதற்காக தமிழ்நாடு மீனவர் பேரவையின் நிறுவனத்தலைவர் அன்பழகன் கடலூர் தேவனாம்பட்டினம் வந்தார். அங்கு கிராம மக்கள் சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
கிராம மக்கள் மத்தியில் அவர் பேசியதாவது; கடலும், கடற்கரைகளும் மீனவர்களின் பிறப்புரிமை. குறிப்பிட்ட தூரத்தில்தான் மீன்பிடிக்க வேண்டும். சிறிய படகுகளைதான் பயன்படுத்த வேண்டும். குறிப்பிட்ட வகை மீன்களைதான் பிடிக்க வேண்டும் உள் ளிட்ட ஏராளமான கட்டுப்பாட்டுகளுனான மீன் பிடி மசோதா மீனவர்க ளின் நலன்களுக்கு முற்றி லும் எதிரானது. இதை எதிர்த்து டில்லியில் மிகப்பெரிய போராட்டம் அறிவிக்கப்பட்ட பிறகு மசோ தாவை கைவிட்டதாக மத் திய அரசு அறிவித்துள் ளது.மீனவர்கள் ஒற்றுமை யாக இருந்தால் யாரும் மீனவர்களை அழிக்க முடியாது.
மீனவர்களின் நலன் களை பாதிக்கும் இந்த மசோதா எந்த வடிவத்தில் வந்தாலும் அதனை தமிழ்நாட்டில் நாம் அனுமதிக்கமாட்டோம். இந்திய கட லோர கப்பற்படை வீரர் களை இலங்கையர்கள் கடத்திச் சென்றது நம்நாட்டிற்கு மிகப்பெரிய அவமானம். நாட்டின் பாதுகாப்பு கேடயமாக மீனவர்கள் உள்ளனர். நாடடை பாதுகாக்க எந்தவிதமான தியாகத்திற்கும் மீனவர்கள் தயாராக உள்ளனர். அவர்களுக்கு உடனடியாக அடையாள அட்டைகளை வழங்க வேண்டும். மீனவர்களை கப்பல்படை தாக்கியது கண்டனத்திற்குரியது. அவர்கள் மீது மீனவர்பேரவை வழக்கு தொடர உள்ளது. மீனவர்களையும் மீனவர்களின் வாழ்வாதாராங்களையும் பாதுகாக்க நாம் ஒற்றுமையுடன் இருந்து போராடுவோம். இவ்வாறு அவர் பேசினார்.
மாநிலத் துணைத் தலைவர் தாமோதரன், கடலூர் மாவட்டத் தலை வர் சுப்புராயன், விழுப்புரம் மாவட்டத் தலைவர் விந்தியன் உள்ளிட்ட தமிழ்நாடு மீனவர் பேரவை நிர்வாகிகள் ஏராளமானோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.