கோரிக்கை பதிவு

கடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கடலூரில் கடல் உள்வாங்கியது: படகுப் போக்குவரத்தில் சிரமம்

கடலூரில் சனிக்கிழமை திடீரென கடல் உள்வாங்கியது. இதனால் கடலூரில் மீன்பிடிப் படகுகள் கடலுக்குள் சென்றுவருவதில் சிரமம் ஏற்பட்டது. சுனாமிக்குப் பிறகு கடலூர் மாவட்டக் கடல் பகுதிகளில் தொடர்ந்து மாற்றங்கள் நிகழ்ந்து வருவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். கடலில் நீரோட்டங்களிலும் ஏற்படும் பல மாற்றங்களை மீனவர்கள் சந்திக்க நேரிடுகிறது. இதனால் மீன்பிடித் தொழில் அடிக்கடி பாதிப்புக்கு உள்ளாகிறது. கடலில் ஏற்படும் மாற்றங்களால் கடலூர் மாவட்டத்தில் மீன் வரத்து வெகுவாகக் குறைந்து வருகிறது. இதனால் மீன் பற்றாக்குறையும், விலை ஏற்றமும் மீன் உணவை விரும்புவோரிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. கடல் உள்வாங்கியது குறித்து, தமிழ்நாடு மீனவர் பேரவை கடலூர் மாவட்டத் தலைவர் சுப்புராயன் கூறுகையில், சுனாமிக்குப் பிறகு வங்கக் கடலில் இத்தகைய மாற்றங்கள் மிகச் சாதாரணமாகி விட்டது. கடந்த இரு நாள்களாக கடல் உள்வாங்கிக் காணப்படுகிறது. இன்னும் 2 மாதங்களுக்கு இந்த மாற்றங்கள் அடிக்கடி நிகழும் என்று எதிர்பார்க்கிறோம். இதனால் மீன்பிடித் தொழிலில் தற்போதைக்கு பெரிய மாற்றம் எதுவும் இல்லை. கடலூர் துறைமுகத்தின் முகத்துவாரம் தூர்ந்து கிடப்பதால், கடல் உள்வாங்கி இருக்கும் நேரங்களில், மீன்பிடிப் படகுகள் கடலுக்குள் சென்றுவருவது சிரமமாக இருக்கிறது. மீன் பிடித்துவிட்டு படகுகள் கரை திரும்பும்போது, கடல் உள்வாங்கி விட்டால், படகை கடலில் நங்கூரம் போட்டு நிறுத்தி விடுவோம். அங்கேயே காத்து இருந்து, பின்னர் கடல் மட்டம் உயரும் போதுதான், படகுகள் கரைக்குத் திரும்பும். கடல் உள்வாங்கி இருக்கும் நேரங்களில் அதைப் பொருள்படுத்தாமல் சிலர், கடலுக்குள் செல்லவோ, கரை திரும்பவோ நேரிடும்போது, படகுகள் சேதம் அடைந்து, பெருத்த நஷ்டம் ஏற்பட்டு விடுகிறது. பின்னர் அந்தப் படகு உரிமையாளர் வேறு படகுகளில் கூலிக்கு மீன்பிடிக்கச் செல்வார்கள் என்றார்.

சில்வர் பீச்சில் மக்கள் கூட்டம் அதிகரிப்பு

கடலூரில் நேற்று அனல் காற்று வீசியதால் சில்வர் பீச்சில் மக்கள் கூட் டம் அதிகமாக இருந்தது.
சுனாமிக்கு பிறகு வங்கக் கடலில் பல்வேறு மாற்றங்கள் உருவாகி வருகின்றன. சில நேரங்களில் கடல் உள்வாங்குவதும், வெளியே வருவதும் நடந்து வருகிறது. கடந்த 2 வாரம் முன் சுனாமி பீதி காரணமாக பீச்சிற்கு செல்லவும் பொதுமக்களுக்கு தடைவிதிக்கப் பட்டது. இந்நிலையில் கடந்த வாரம் திடீரென ஏற்பட்ட "லைலா' புயல் காரணமாக மீண்டும் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. மேலும் வானம் மேக மூட்டத்துடன் இருந்ததால் சில்வர் பீச்சிற்கு வரும் மக்கள் கூட்டமும் குறைந் திருந்தது. நேற்று கடுமையான வெயில் அடித்ததால் அனல் காற்று வீசியது. அதனால் மாலை நேரத்தில் சில்வர் பீச்சில் மக்கள் கடலில் குளித்து மகிழ்ந்தனர்.

மாயமான மீனவர்களில் மூவர் கரை திரும்பினர் : மற்றொரு மீனவரை தேடும் பணி தீவிரம்

மீன் பிடிக்க சென்று, காணாமல் போன மூன்று மீனவர்கள் நேற்று கரைக்கு திரும்பினர். மற்றொரு மீனவரை தேடும் பணி நடந்து வருகிறது.
லைலா புயல் காரணமாக, பலத்த காற்று வீசும் என்பதால், தூத்துக்குடியில், 2,300 நாட்டுப் படகுகள், நேற்று கடலுக்கு செல்லவில்லை. கடலூர் தேவனாம்பட் டினத்தை சேர்ந்த சுப்பிரமணியன் (60), அவரது மகன் ஆனந்தன் (26), பூபாலன் (23) ஆகிய மூவரும், கடந்த 18ம் தேதி, பைபர் படகில் மீன் பிடிக்கச் சென்றனர். இதேபோல், சகாய ராஜ் என்பவர் மீன்பிடிக்க தனியாக சென்றார். இவர்கள், நேற்று முன்தினம் மதியம் 3 மணி வரை, கரை திரும்பவில்லை. அவர்களிடமிருந்து எந்த தகவலும் வராததால், உறவினர்கள் அச்சமடைந்தனர். தகவலறிந்த கடலோர பாதுகாப்பு படை யினர், அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் இரவு, ஆழ்கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிரெட்ஜரில் அவர் கள் தஞ்சமடைந்தனர். கரைக்கு திரும்பிய மீன வர்கள் கூறுகையில், "புயல் எச்சரிக்கை விடுவதற்கு முன்பாகவே கடலுக்கு சென்றுவிட்டோம். இன்ஜின் பழுதானதால் கரைக்கு திரும்ப முடியவில்லை. மூன்று பேரும் மொபைல் போன் எடுத்து செல்லாததால், நாங்கள் கடலில் தத்தளித்ததை, தெரிவிக்க முடியவில்லை. நாங்களே இன்ஜினை பழுதுபார்த்து கரைக்கு திரும் பும் முயற்சியில் ஈடுபட் டோம். ஆனால் முடியவில்லை. வேறுவழியின்றி டிரெட்ஜரில் தஞ்சமடைந் தோம்' என்றனர்.

கடலூர்: மீன்பிடி ​ தடைக்காலம் தொடங்கியது

கடலூர் மாவட்டத்தில் மீன்பிடித் தடைக்காலம் புதன்கிழமை நள்ளிரவு முதல் தொடங்கியது.

ஏப்ரல் 15 முதல் மே 29-ம் தேதிவரை 45 நாள்கள் மீன்பிடிக்க கடந்த 9 ஆண்டுகளாகத் தடை விதிக்கப்பட்டு வருகிறது.​ இந்தத் தடைகாலத்தில் ​ இழுவை வலைகளை பயன்படுத்தும் இயந்திரப் படகுகள் மீன்பிடிக்கக் கூடாது.​ ​

கடலூர் மாவட்டத்தில் இத்தகைய மீன்படிப் படகுகள் சுமார் 700 உள்ளன.​ இவைகளுக்கு மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டு உள்ளது சாதாரண படகுகள் மட்டுமே தற்போது மீன்பிடிக்க முடியும்.​ ஏப்ரல் 15 முதல் மே கடைசி வரை மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலம்.​ எனவே கடலில் மீன் வளம் தொடர்ந்து பாதுகாக்கப்பட இவ்வாறு மீன்பிடி தடை விதிக்கப்படுவதாக அரசு தெரிவிக்கிறது.


பொதுவாகவே கடல் வளம் குறைந்து வருவதாக மீனவர்கள் தெரிவிக்கிறார்கள்.​ கடலூர் மாவட்டத்தில் சுனாமிக்குப் பிறகு கடலில் மாற்றங்கள் ஏற்பட்டு,​​ மீன்கள் பிடிபடுவது மிகவும் குறைந்து விட்டதாக மீனவர்கள் கூறுகின்றனர்.​ கரையில் இருந்து 5 கி.மீ.​ தூரத்துக்குள் பெரும்பாலும் மீன்கள் கிடைப்பது இல்லை என்றே அவர்கள் கூறுகிறார்கள்.

இதனால் சாதாரண கண்ணாடி இழைப் படகுகள் மற்றும் கட்டுமரங்களைக் கொண்டு மீன் பிடிப்பது இனி இயலாத காரியம் என்ற கருத்து மேலோங்கி வருகிறது.

இந்நிலையில் இழுவை வலைகளை பயன்படுத்தும் பெரிய படகுகள் மீன்பிடிக்கத் தடை விதிப்பது,​​ ஒட்டுமொத்த மீனவர்களுக்கும் தடை விதிப்பதாகவே உள்ளதாக மீனவர்கள் கருதுகிறார்கள்.

இதுகுறித்து மீனவர் பேரவை கடலூர் மாவட்டத் தலைவர் சுப்புராயன் கூறியது:

அரசு உத்தரவுப்படி கடலூர் மாவட்டத்தில் இழுவை வலைகளை பயன்படுத்தும் 700 இயந்திரப் படகுகள் மீன்பிடிக்க இயலாது.​ ஆனால் இந்த இயந்திரப் படகுகளுடன் இணைந்து மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் கண்ணாடி இழைப் படகுகள் 2 ஆயிரம் உள்ளன.​ மீன்படித் தடைகாலத்தில் இந்த 2 ஆயிரம் படகுகளுக்கும் அவைகளை நம்பி இருக்கும் தொழிலாளர்களுக்கும் வேலை இல்லை.

இந்த ஆண்டு பொதுவாகவே மீன்கள் கிடைப்பது மிகக்குறைவாக இருந்தது.​ புவி வெப்பம் அதிகரிப்பு காரணமாக பூமியில் மட்டுமன்றி கடலிலும் மாற்றம் ஏற்பட்டு உள்ளது.​ சீசன்கள் மாறியிருக்கின்றன.

ஒரு மாதமாகத்தான் மீன்கள் கிடைத்துக் கொண்டு இருந்தன.​ தற்போது அதிகமாக மீன்கள் கிடைக்கும் காலம்.​ இந்த நேரத்தில் தடை விதித்து இருப்பது முறையாகத் தெரியவில்லை.

கடலூர் மாவட்ட எல்லை நெடுகிலும் ஆழ்கடலில் தைவான்,​​ நார்வே,​​ பர்மா,​​ மலேசியா போன்ற வெளிநாடுகளின் மீன்பிடிக் கப்பல்கள் எந்தத் தடையுமின்றி மீன்பிடித்துக் கொண்டு இருக்கின்றன.​ அந்தக் கப்பல்களுக்கும் மீன்பிடிக்கத் தடை விதிக்க வேண்டும்.​ இல்லையேல் தமிழக மீனர்களுக்கு மட்டும் விதிக்கப்படும் இந்தத் தடை,​​ பன்னாட்டு மீன்பிடி நிறுவனங்களுக்கு சாதகமாக எடுத்த முடிவாகத்தான் அமையும் என்றார்.

15-ம் தேதி முதல் 45 நாள்கள் விசைப்படகுகள் மீன்பிடிக்கத் தடை

வரும் 15-ம் தேதி முதல் 45 நாள்களுக்கு விசைப் படகுகள், கடலில் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது. கடலூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இந்தத் தடை அமுலில் இருக்கும்.சென்னை, கடலூர், நாகை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட 14 மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான குடும்பங்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு உள்ளன. கடல்தான் இவர்களின் வாழ்வாதாரம். ஆயிரக்கணக்கான விசைப் படகுகள், சிறிய படகுகள், கட்டுமரங்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றன.  பெரிய படகுகள் சுருக்கு வலை, இரட்டைமடி வலை, கொல்லிமடி வலை உள்ளிட்ட பல்வேறு வகையான மீன் வலைகளைப் பயன்படுத்துகின்றன. இதனால் சிறிய மீன்கள் முதல் பெரிய மீன்கள் வரை, பெருமளவுக்கு மீன்கள் பிடிக்கப்பட்டு விடுகின்றன. எனவே கடல் மீன் வளம் தொடர்ந்து பாதுகாக்கப்படவும், மீனவர்களுக்கு பரவலாக பல மாதங்கள் மீன் கிடைக்கவும், ஏப்ரல் 15-ம் தேதி முதல் 15 நாள்கள் விசைப் படகுகள் மீன்பிடிக்க அரசு தடை விதிக்கிறது.  மேலும் ஏப்ரல், மே மாதங்கள்தான் மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலங்கள் என்று கூறப்படுகிறது. இந்த நாள்களில் உற்பத்தியாகும் மீன் குஞ்சுகளையும் பிடித்து விட்டால், மற்ற நாள்களில் மீன்கள் கிடைப்பது அரிதாகிவிடும் என்று கருதப்படுவதால் மேற்கண்ட நாள்களில் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது. ஆனால் சிறிய படகுகள் மற்றும் கட்டுமரங்களுக்குத் தடையில்லை. கடந்த 7 ஆண்டுகளாக இந்தத் தடை விதிக்கப்பட்டு வருகிறது. இதற்கு மீனவர்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு அளித்து வருகிறார்கள். மீன்பிடித் தடைக் காலத்தில் பாதிக்கப்படும் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மீன்பிடி தடைக் காலத்தில் குடும்பத்துக்கு ரூ.500 வீதம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் சுமார் 30 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.இந்த நிவாரணத் தொகையை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று, தமிழ்நாடு மீனவர் பேரவையின் கடலூர் மாவட்டத் தலைவர் சுப்புராயன் அரசுக்குக் கோரிக்கை விடுத்து உள்ளார். அவர் மேலும் கூறியது: கடலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை சென்ற ஆண்டு முழுவதும் மீன்கள் சரியாகக் கிடைக்கவில்லை. கரையோரப் பகுதிகளில்தான் மீன்கள் அதிகம் உற்பத்தி ஆகின்றன. ஆனால் கடற்கரைகளில் பெருகிவரும் ரசாயனத் தொழிற்சாலைகளால், கடலில் பெருமளவுக்கு கழிவுகள் கலக்கின்றன. இதனால் மீன்வளம் பாதிக்கப்படுகிறது. மீன்கள் கிடைப்பது அரிதாகி, மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்றார் சுப்புராயன்.

200 மீட்டர் சாலை அமைக்கவில்லை

கடலூர் அருகே மீனவ கிராமமான சித்திரைப்பேட்டையிலிருந்து பரங்கிப்பேட்டை வரை கடலோரப்பாதை உள்ளது. தற்போது இந்த பாதை தைக்கால்தோணித்துறையில் இருந்து தொடங்கி சொத்திக்குப்பம், ராஜாப்பேட்டை, சித்திரைப்பேட்டை, தம்மணாம்பேட்டை, நாயக்கர்பேட்டை, நஞ்சலிங்கம்பேட்டை, பெரியக்குப்பம், பேட்டைநகர், அய்யம்பேட்டை, மானியார்பேட்டை, அன்னப்பன்பேட்டை,ரெட்டியார்பேட்டை, மடவாய்பள்ளம், குமாரப்பேட்டை, சாமியார்பேட்டை, புதுக்குப்பம், இந்திராநகர், புதுப்பேட்டை, சின்னூர் வடக்கு மற்றும் தெற்கு சலங்கைகாரத் தெரு ஆரியநாட்டு சலங்குகார தெரு வழியாக பரங்கிப்பேட்டை வரை செல்கிறது.
தற்போது இந்த பாதை யில் சித்திரப்பேட்டையில் இருந்து தம்மணாம்பேட்டை வரையில் உள்ள ஒன்றரை கி.மீ தூர சாலை அமைக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்ட 200 மீட்டருக்கு சாலை முற்றிலும் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் தம்மணாம்பேட்டையில் இருந்து சித்திரைப்பேட்டை வரையிலான கிராம மக்கள் சுமார் 15 கி.மீ வரை சுற்றி வரும் அவல நிலை உள்ளது.
குறிப்பிட்ட அந்த 200 மீட்டருக்கு சாலை அமைப் பது தொடர்பாக தமிழ்நாடு மீனவர் பேரவை மாவட்டத் தலைவர் சுப்புராயன் தலைமையில் செயலாளர் முருகன், சித்திரைப்பேட்டை தலைவர் புஷ்பலிங்கம், துணைத் தலைவர் சுப்புராயன், செயலாளர் அன்பு, பொருளாளர் முரளி, தம்மணாம்பேட்டை தலைவர் பாஸ்கரன், துணைத் தலைவர் ராமச்சந்திரன், செயலாளர் ஹரி, பொருளாளர் ஆறுமுகம் மற்றும் இரு கிராம பஞ்சாயத்து நிர்வாகிகளும் கடலூர் மாவட்ட ஆட்சியர் சீத்தாராமனிடம் மனு அளித்தனர்.
குறிப்பிட்ட 200 மீட்டர் தூரத்துக்கு சாலை அமைக்கப்படாததால் பொதுமக் கள், மாணவர்கள், பணிக்குச் செல்வோர் 15 முதல் 20 கி.மீ தூரம் சுற்றிச் செல்லவேண்டியிருக்கிறது.
இதனால் கடலூர் சிதம்பரம் சாலையில் போக்கு வரத்து நெருக்கடியும் விபத்துகளும் ஏற்படுகிறது. கடலோரச் சாலை எந்த நோக்கத்திற்காக அமைக்கப்பட்டதோ அது நிறைவேறாமல் உள்ளது. குறிப்பிட்ட 200 மீட்டர் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமானதாகும். அந்த நிறுவனத்திடம் பேசி 200 மீட்டருக்கு சாலை அமைத்து தந்து கடலோர கிராம மக்களின் அவல நிலையை போக்க வேண்டும், என மனுவில் கூறியுள்ளனர்.
15 கி.மீ சுற்றி செல்ல வேண்டிய நிலை. சாலை அமைத்து தர
ஆட்சியரிடம் மீனவர்கள் மனு

சில்வர் பீச்சை சுத்தம் செய்த ​ கடலூர் திரைப்பட இயக்கத்தினர்

கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சை,​​ கடலூர் திரைப்பட இயக்கத்தினர் புதன்கிழமை சுத்தம் செய்தனர்.கோடைகாலம் தொடங்கி விட்டதால் கடலூர் சில்வர் பீச்சுக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது.​ மேலும் கடந்த ஞாயிறுக்கிழமை மாசிமகம் திருவிழா சில்வர் பீச் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் நடந்தது.2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் அங்கு கூடினர்.​ இதனால் கடற்கரை முழுவதும் பாலித்தீன் பொருள்கள் உள்ளிட்ட குப்பைகள் நிறைந்து காணப்பட்டன.குப்பைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை எழுந்தது.​ இதைத் தொடர்ந்து கடலூர் திரைப்பட இயக்கத்தினர் புதன்கிழமை சில்வர் பீச்சில் குப்பைகளை அகற்றி சுத்தப்படுத்தும் பணியைத் தொடங்கினர்.இந்த நிகழ்ச்சிக்கு கடலூர் திரைப்பட இயக்கச் செயலர் சாமி கச்சிராயர் தலைமை வகித்தார்.​ இயக்குநர் தமிழாதரன்,​​ உதவி இயக்குநர் ​ தமிழ்ச் சான்றோன்,​​ ​ செயற்குழு உறுப்பினர்கள் ரஞ்சனி,​​ காத்தமுத்து தட்சிமாமூர்த்தி,​​ சிவா,​​ பிரசாத் உள்ளிட்டோர் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.இது குறித்து அவர்கள் பேசுகையில்,​​ கடலூர் சில்வர் பீச்சுக்கு திரைப்படம் ஒன்றிற்கான கலந்துரையாடலுக்காக வந்தோம்.​ ஆனால் இங்கு குப்பைகள் நிறைந்து மிக மோசமாகக் காட்சி அளித்தது சில்வர் பீச்.எனவே மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த,​​ துப்புரவுப் பணியில் ஈடுபட்டோம் என்றும் தெரிவித்தனர்.

ரூ.200 கோடி செலவில் திட்டம் ​ திருப்பூர் சாயப் பட்டறைக் கழிவுகளை கடலூர் கடலில் கலக்க எதிர்ப்பு

ரூ.200 கோடி செலவில்,​​ திருப்பூர் சாயப்பட்டறைக் கழிவுகளை கடலூர் கடலில் கலக்க முடிவு செய்து இருப்பதற்கு,​​ கடலூர் நகர அனைத்து குடியிருப்போர் நலச் சங்கக் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.​ ​​ கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மு.மருதவாணன் புதன்கிழமை தமிழக முதல்வருக்கு அனுப்பிய கோரிக்கை மனு:​ ​​ மத்திய அரசு நிதிநிலை அறிக்கையில் திருப்பூர் சாயப்பட்றைக் கழிவுகளை சுத்திகரிப்பதற்கு ரூ.200 கோடி ஒதுக்கி இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.​ கழிவுநீரைச் சுத்திகரிக்க ரூ.200 கோடி ஒதுக்கியதற்கு ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதிமாறனுக்கு பாராட்டு தெரிவிக்கிறோம்.​ ​ ​ ஆனால் அந்தக் கழிவுகளை அகற்றும் இடமாகக் கடலூரைத் தேர்ந்து எடுத்ததற்கு எங்கள் கண்டனத்தைத் தெரிவிக்கிறோம்.​ ​​ கடலூரில் உள்ள ரசாயனத் தொழிற்சாலைகளின் கழிவுகளால் ஏற்கெனவே கடலூர் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது.​ புற்றுநோய் மருத்துவமனைக்கு வரும் 20 பேரில் ஒருவர் கடலூரைச் சேர்ந்தவராக இருப்பதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி இருக்கிறது.​​ ​ புளோரோஸிஸ் என்ற பல் மற்றும் எலும்பு வியாதி தமிழகத்தில்,​​ கடலூரில்தான் அதிகம் இருப்பதாகக் கண்டறியப்பட்டு உள்ளது.​ கடலூர் மக்கள் சுவாசிக்கும் காற்று மற்ற பகுதிகளைவிட 5 மடங்கு மாசுபட்டு இருக்கிறது.​ ​​ தமிழகத்தில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்ட நகரங்களில்,​​ தண்ணீர் காரத் தன்மையாக மாறியிருக்கும் அல்லது அமிலத் தன்மையாக மாறியிருக்கும்.​ ஆனால் கடலூரில் காரத் தன்மையும்,​​ அமிலத் தன்மையும் காணப்படுவது அதிர்ச்சி தரும் தகவலாக உள்ளது.​ ​ ​​ ​ அதற்கு ரசாயன ஆலைகளே காரணம்.​ பல தொழிற்சாலைகள் தங்களது சுத்திகரிக்க முடியாத ரசாயனத் திரவக் கழிவுகளை நிலத்தில் ரகசியமாக ஆழ்குழாய்க கிணறுகள் அமைத்து,​​ பூமிக்குள் செலுத்துகின்றன.​​ ​ இந்த நிலையில் கடலூரில் மிகப்பெரும் ஜவுளிப் பூங்கா அமைய இருக்கிறது.​ திருப்பூர் மற்றும் கோவைப் பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் துணிகளைக் கடலூருக்குக் கொண்டு வந்து,​​ ரசாயனங்களைக் கொண்டு பதப்படுத்துதல்,​​ சாயம் தோய்த்தல் உள்ளிட்ட பணிகளை மட்டும் கடலூர் ஜவுளிப் பூங்காவல் மேற்கொள்ள திட்டமிட்டு இருப்பதைக் கண்டிக்கிறோம்.​​ ​ இப்பணிக்காகத் தான் மத்திய அரசு ரூ.200 கோடி ஒதுக்கி இருப்பது வருத்தம் அளிக்கிறது.​ ​ இப்போதே கடலூரில் 30 கி.மீ.​ நீளத்துக்கு கடலில் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது.​ சாயப் பட்டறைக் கழிவுகளையும் கடலில் கொட்டினால் விளைவுகள் மிகவும் மோசமாகும் என்றும் மனுவில் மருதவாணன் கேட்டுக் கொண்டு உள்ளார்.

மாசிமக திருவிழா நாளை கோலாகலம்

கடலூர் தேவனாம்பட்டினம், சிங்காரதோப்பு உள்ளிட்ட கடற்கரை பகுதியில் ஆண்டுதோறும் மாசி மக திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. இந்தாண்டு மாசிமக திருவிழா நாளை(28ம் தேதி) நடைபெறுகிறது.
திருக்கோவிலூர் உலகளந்த சுவாமி, திருவந்திபுரம் தேவநாத சுவாமி, பாடலீஸ்வரர் சுவாமி மற்றும் கடலூர், விழுப்புரம் மாவட் டம், புதுச்சேரி மாநிலத்தில் இருந்து சுமார் 30 கோயில்களில் இருந்து சுவாமிகள் கடலில் தீர்த்தவாரிக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேவனாம்பட்டினம் மற்றும் அதனையொட்டி உள்ள சில்வர் பீச் கடற்கரை பகுதி மற் றும் சிங்காரதோப்பு உள்ளிட்ட இடங்களில் மாச மக திரு விழாவில் 2 லட்சம் பேர் கலந்து கொண்டு சாமியை தரி சனம் செய்வார்கள்.
200 போலீசார் பாதுகாப்பு படகு சவாரிக்கு தடை
திருக்கோவிலூர் உலகளந்த சுவாமி, திருவந்திபுரம் தேவநாத சுவாமி, பாடலீஸ்வரர் சுவாமி மற்றும் கடலூர், விழுப்புரம் மாவட் டம், புதுச்சேரி மாநிலத்தில் இருந்து சுமார் 30 கோயில்களில் இருந்து சுவாமிகள் கடலில் தீர்த்தவாரிக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேவனாம்பட்டினம் மற்றும் அதனையொட்டி உள்ள சில்வர் பீச் கடற்கரை பகுதி மற் றும் சிங்காரதோப்பு உள்ளிட்ட இடங்களில் மாச மக திரு விழாவில் 2 லட்சம் பேர் கலந்து கொண்டு சாமியை தரி சனம் செய்வார்கள்.
கடந்த ஆண்டு நடந்த விழாவின் போது சில அசம்பாவித சம்பவங்கள் நடந்துள்ளது. கடலில் குளித்த போது மூழ்கி உயிரிழந்தவர் கள் சம்பவங்கள் நடந்துள்ளன.இவ்விழா தொடர் பாக பாதுகாப்பு ஏற்பாடு கள் குறித்து கடலூர் டிஎஸ்பி அலுவலகத்தில் ஆலோ சனை கூட்டம் நடந்தது.
டிஎஸ்பி ஸ்டாலின் தலைமை தாங்கினார். நகராட்சி தலைவர் தங்கராசு முன்னிலை வகித்தார். இன்ஸ்பெக்டர்கள் ஆரோக்கியராஜ், ஏழுமலை, கண்ணன், சப்&இன்ஸ்பெக்டர்கள் பொன்ராஜ், ஆனந்தபாபு, ப்ரியா, கவிதா மற்றும் தேவனாம்பட்டினம், ரெட்டிச்சாவடி, கடலூர் முதுநகர், துறைமுகம் ஆகிய பகுதி கடற்கரை கிராம பஞ்சாயத்து தலைவர்கள், பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் திருவிழா காண வரும் பொதுமக்களை விசைப்படகில் ஏற்றிக்கொண்டு ஆற்றிலோ, கடலிலோ செல்லக் கூடாது. குளிப்பதற்கு தடை விதித்து கண்காணிக்க வேண்டும். போதிய மின்விளக்குகள் தேவையான இடங்களில் அமைக்க வேண்டும். அமைதியான முறையில் திருவிழா நடைபெற பாது காப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு கிராம நிர்வாகிகள் உதவி புரிய வேண்டும். ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கிடையாது. போலீசாருடன் கடற்கரை கிராமப்பகுதி மக்களும் நீரில் மூழ் காத வகையில் பாதுகாப்பு கவசங்களுடன் 100 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது என போலீஸ் தரப்பில் எடுத்துரைக்கப்பட்டது.
காவல்துறை சார்பில் மாசி மக திருவிழாவுக்கு எஸ்பி தலைமையில் டிஎஸ்பி, 2 இன்ஸ்பெக்டர், 8 சப்& இன்ஸ்பெக்டர், 72 போலீசார் மற்றும் 64 ஆயுதப்படையினர் உள்ளிட்ட 200 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடு கின்றனர்.

மீனவன் அநாதை..? கடல் புறம்போக்கு?


டல்புற மீனவன் மறுபடியும் கதிகலங்கிக் கிடக்கிறான்... இந்த தடவை அவன் பயம் உயிர் மட்டுமல்ல... ஒட்டுமொத்த வாழ்வாதாரமும்தான்!
'தாய்மடி', 'கடலம்மா' என்றெல்லாம் கொண்டாடும் கடலைத் தங்களிடமிருந்து மொத்தமாகப் பிரித்துவிடுவார் களோ என்று அஞ்சிக் கிடக்கிறான் அவன். மத்திய அரசு கொண்டுவர முயற்சிக்கும் 'மீன்வள ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மைச் சட்டம்' என்ற புதிய சட்ட முன்வரைவு, நாட்டின் மொத்த மீனவர்களையும் அப்படிப் பதறவைத்து விட்டது.
''இந்த சட்டம் அமலுக்கு வந்தால் மீனவர்களுக்கு இரண்டே வழிதான்... கடலோரத்தை விட்டு வேறு தொழில் பார்க்கப் போக வேண்டும். இல்லையென்றால், பன்னாட்டு மீன்பிடி நிறுவனங்களிடம் கூலியாட் களாக சேரவேண்டும்...'' என்று அதிர்ச்சி தெறிக்கும் பார்வையோடு நம்மிடம் ஆரம்பித்தார், பேராசிரியர் வறீதய்யா கான்ஸ்டன்டின். நாகர்கோவில்காரரான இவர் 'நெய்தல் சுவடுகள்,' 'ஆழிப் பேரிடருக்குப் பின்,' 'அணியம்' போன்ற கடலோர வாழ்வடங்கிய நூல்களை எழுதியவர். இந்த சட்ட முன்வரைவு பற்றி விளக்கமாகப் பேசினார்.
''சர்வதேச சட்டப்படி, ஒவ்வொரு நாட்டின் கடற்கரை யில் இருந்து 12 நாட்டிக்கல்
மைல் தூரம்தான் அந்த நாட்டின் கடல் எல்லை... அதாவது, மீன்பிடி எல்லை. இதற்குள்தான் மீன்பிடிக்கலாம். அதுபோக, 200 நாட்டிக்கல் மைல் தூரத்துக்கு உள்ள கனிமவளம், மீன்வளம் எண்ணெய் வளம் அனைத்தும் அந்தந்த நாட்டுக்குத்தான். இந்தியாவில், மாநில அரசுகள்தான் மீன்பிடி நிர்வாகத்தைக் கவனிக்கின்றன. கடலுக்குள் மீன்பிடிக்கும் படகுகள் லைசென்ஸ் வாங்குவதையும், புதுப்பிப்பதையும் மாநில அரசிடமே செய்துகொள்ளலாம். இந்த புதிய சட்டம், மாநில அரசின் முழு அதிகாரத்தையும் மத்திய அரசிடம் மாற்றிவிடுகிறது. இது அமலானால், கட்டுமரம் வைத்திருப்பவன்கூட லைசென்ஸ் வாங்க டெல்லிக்குத்தான் போகவேண்டும். 'எந்த இடத்தில், எத்தனை நாட்கள் மீன் பிடிக்கப் போகிறேன்' என்று முன்கூட்டியே குறிப்பிடவேண்டுமாம்! சர்வே நம்பர், சதுர அடி கணக்கெல்லாம் போட்ட பிறகு மீன் பிடிக்க, கடல் என்ன புறம்போக்கு நிலமா? அதோடு, 'என்ன வகையான மீனை, என்ன முறையில் பிடிக்கப் போகிறோம்?' என்று குறிப்பிட்டால்தான் லைசென்ஸாம்! பல வகையான வலைகளும் தேவைதான். ஒவ்வொரு வகை வலைக்கும் சில மீன்கள் சிக்கும். எந்த மீன், என்ன வலை என்பதையெல்லாம் முன்கூட்டியே சொல்வது எப்படி சாத்தியம்? இன்னொரு நிபந்தனை, 'என்ன நோக்கத்துக்காக மீன் பிடிக்கிறீர்கள்?' என்பது! இந்த நிபந்தனை, வயிற்றுப்பாட்டுக்கு மீன் பிடிப் பவன், தொழில்ரீதியாக பிடிப்பவன் என்று இரண்டு வகையாக மீனவர்களைப் பிரிக்கிறது. இந்த சட்டப்படி, எந்த வகை படகும் 12 நாட்டிக்கல் மைல் தாண்டி மீன் பிடிக்கக் கூடாது. அதை மீறி மீன்பிடித்தால், 9 லட்ச ரூபாய் அபராதம், 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை! எந்த வகைப் படகானாலும் ஒரு நேரத்தில் 10 ஆயிரம் ரூபாய் மதிப்புக்கு அதிகமான மீன் பிடிக்கக்கூடாது. மீறினால், 25 ஆயிரம் ரூபாய் அபராதம்! இதைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் அதிகாரம், கோஸ்ட் கார்டுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே சகல அதிகாரங்களும் கொண்ட அவர்கள், மீனவர்களை இந்திய பிரஜைகளாகவே மதிப்பதில்லை! அவர்கள் படகை மறித்து, பிடிக்கப்பட்ட மீனின் வகை, மதிப்பு, என்ன வகை வலை என அனைத்தையும் பரிசோதிக்கலாம். பறிமுதல் செய்யவும் அதிகாரம் உண்டு. இதுபற்றி குறிப்பிடும்போது, 'உங்களை கைது செய்து கோஸ்ட் கார்டு ஆபீஸர் என்ன நடவடிக்கை எடுத்தாலும், நல்லெண்ண அடிப்படையில் எடுக்கப்பட்டதாகவே கருதப்படும். தவறு இழைக்கலாம் என்ற அனுமானத்தின் பேரில் முன்கூட்டியே கைது செய்யும் அதிகாரமும் அவர் களுக்கு உண்டு. ஒருவேளை, கைதுக்கான காரணங்கள் தவறானவை என பின்னர் தெரியவந்தால், கோஸ்ட் கார்டு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாது!' என்று அரசின் சட்ட முன்வரைவில் தெளிவாக உள்ளது. உலகின் வேறெந்த நாட்டிலும்கூட இத்தனை மோசமான சட்டம் வரவில்லை. விவாதத்துக்கு ஏற்றுக்கொள்ளவே தகுதியற்ற இந்த சட்டத்தை, மீனவர்களின் கருத்தைக்கூட கேட்காமல் நிறைவேற்றத் துடிப்பதில் துளியும் நியாயமில்லை!'' என்று பொங்கிய வறீதய்யா, மேலும் தொடர்ந்தார்... ''ஒரு கோடி இந்திய மீனவர்களில், 10 லட்சம் பேர் கடலுக்குச் சென்று மீன்பிடிப்பவர்கள். இப்படி இந்த மரபுவழி மீனவர்களை கடல் புறத்தில் இருந்து அப்புறப் படுத்தி, ஒட்டுமொத்தமாக பன்னாட்டு நிறுவனங்களிடம் கடலை பட்டா போட்டு ஒப்படைப்பதுதான் இந்திய அரசின் திட்டம். 'நீங்கள் என்ன நோக்கத்துக்காக மீன் பிடிக்கிறீர்கள்?' என்ற கேள்வியிலேயே அது தெரிகிறது.
ஏற்கெனவே 'கடற்கரையோர மேலாண்மைத் திட்டம்' என்று மீனவர்களை வெளியேற்றும் திட்டம் ஒன்றை சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு செயல்படுத்த முனைந்தது. ஆனால் அது, கருத்துக் கேட்புக்கு விடப்பட்டபோது, நாடு முழுவதும் மக்களிடம் எதிர்ப்பு... அதில் தோற்ற அரசு, இப்போது புதிய வடிவத்துடன் மீனவர்களை வெளியேற்ற வந்திருக்கிறது.இது மீனவர்களின் பிரச்னை மட்டுமில்லை... இந்திய மக்களில் சரிபாதி, மீன் சாப்பிடுபவர்கள். 'ஒமேகா கொழுப்பு அமிலம்' என்ற கடல் மீனில் இருக்கும் புரதச் சத்து, மனித மூளை வளர்ச்சிக்கு அவசியமானது. இன்னும் சில ரத்த நோய்களுக்கும் மருந்து! ஐரோப்பியர்கள் ஆண்டுக்கு 15 கிலோ மீன் சாப்பிடுகின்றனர். இந்தியர்கள் 7 முதல் 8 கிலோ மீன்களே சாப்பிடுகின்றனர். அதுவும் புரதச் சத்துள்ள மீன்கள் நமக்குக் கிடைப்பதில்லை. ஆனால், இந்திய கடல் எல்லையில் இறால், சிங் இறால், மஞ்சள் துடுப்பு சூறை, பாறை, கணவாய் போன்ற புரதச் சத்துள்ள ஏராள மீன்கள் உள்ளன. இவை பிடிக்கப் பட்டதும், கரைக்கே வராமல் நடுக்கடலில் வைத்தே வெளிநாட்டுக் கப்பல்களுக்கு கைமாற்றப்படுகின்றன! அந்நியச் செலாவணி என்று இதை நியாயப்படுத்தும் அரசு, இத்தகைய வெளிநாட்டு முதலீடுள்ள கப்பல்களுக்கு வெறும் 16 ரூபாய் என்ற உற்பத்தி விலைக்கே டீசல் வழங்குகிறது. கஷ்டப்பட்டு மீன்பிடித்து, அதை உள்ளூர் சந்தைக்குக் கொண்டுவரும் இந்திய மீனவனுக்கோ, ஒரு லிட்டருக்கு வெறும் ஒரு ரூபாய்தான் மானியம்! ஏற்றுமதியாகும் மீன்களுக்கு அந்த நிறுவனங்கள்தான் விலை நிர்ணயிக்கின்றன. சராசரியாக ஒரு கிலோ 186 ரூபாய்க்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஆனால், அதே மீன்களுக்கு நம் உள்நாட்டுச் சந்தையில் ஒரு கிலோவுக்கு 250 ரூபாய் வரை கிடைக்கிறது. இப்படி, சகல வகையிலும் மீனவர்களை வஞ்சிக்கிறது அரசு. 1981-ல் வெளிநாட்டுக் கப்பல்களை ஒழுங்குபடுத்த ஒரு சட்டம் உருவானது. கண்காணிப்பது, சோதனையிடுவது போன்ற அந்தச் சட்ட அம்சங்களை அப்படியே இந்த புதிய சட்டத்தில் புகுத்தியுள்ளனர். அதாவது, இந்திய மீனவர்களை வெளிநாட்டு ஆட்கள் போல நடத்துகின்றனர்! கடல் தொழிலின் மேன்மையும், மீனவர்களின் வாழ்க்கையும் புரியாதவர்கள் ஒன்றுசேர்ந்து உருவாக்கியிருக்கும் இந்த சட்டத்தால் பயனடையப்போவது, பன்னாட்டு நிறுவனங்களின் முதலாளிகள்தான்... யாருமே ஆதரவுக்கு வராத அநாதை மீனவர்கள் அல்ல!'' என்று கொதிப்புடன் முடித்தார் பேராசிரியர். - பாரதி தம்பி 


கடலோர கிராமங்களில் நாளை 2ம் கட்டமாக கைரேகை பதிவு

கடற்கரை பாதுகாப்பையொட்டி கடலோர கிராமங்களில் புகைப்படம் மற்றும் கைரேகை பதிவு சேகரிக்கும் பணி 2ம் கட்டமாக நாளை துவங்கிறது.கடற்கரை பாதுகாப்பை பலப்படுத்தும் பொருட்டு கடலூர் வட்டத்தில் உள்ள கிராமங்களில் தேசிய மக்கள் தொகை பதிவேட்டை தயாரிப்பது தொடர்பாக முதல் கட்டமாக ஏற்கனவே ஒவ்வொரு தனிநபர் பற்றி விபரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக 2ம் கட்டமாக 15 வயதும் அதற்கு மேற்பட்டவர்களின் புகைப்படம் மற்றும் கைரேகை பதிவை சேகரிக்கும் பணி நடந்தது. இந்த பணி 2ம் கட்டமாக நாளை (22ம் தேதி) முதல் 25ம் தேதி வரை நடக்கிறது.

இப்பணியின்போது கணக்கெடுப்பாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் புகைப்படம் எடுக்கும் கீழ்கண்ட நாளில் அந்தந்த கிராமங்களில் உள்ள மையங்களில் புகைப்படம் எடுக்கும் பணி மேற்கொள்வர். காயல்பட்டில் 22, 23 தேதிகளிலும், ஆண்டார்முள்ளிப்பள்ளம்,குடிகாடு கிராமங்களில் 22, 23 தேதிகளிலும், பச்சாங்குப்பம் கிராமத்தில் 22 முதல் 24 வரையிலும், சிங்கிரிகுடியில் 23ம் தேதியும், குண்டுஉப்பலவாடியில் 23ம் தேதி முதல் 25ம் தேதி வரையிலும், தியாகவல்லி, திருச்சோபுரத்தில் 23ம் தேதி முதல் 25ம் தேதி வரையும் நடைபெறும்.ஏற்கனவே புகைப்படம் மற்றும் கைரேகை பதிவு செய்யாமல் விடுபட்டவர்கள் அந்தந்த மையங்களில் வந்து புகைப்படம் மற்றும் கைரேகையினை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

50 கிலோ மயில் மீன் கடலூரில் பிடிபட்டது

கடலூர் மீன்பிடி துறை முகத்தில் நேற்று 50 கிலோ மயில் மீன் பிடிபட்டது. ஆழ்கடல் பகுதிகளில் 10 முதல் 20 நாட்டிக்கல் மைல் தூரத்தில் சுறா, சுங்கம், யா மீன், மயில் உள்ளிட்ட மீன்கள் அதிகளவில் கிடைக்கும்.

இவ்வகை மீன்கள் தூண்டில்கள் மூலமே பிடிக்கப்படும். ரத்த வாடை அதிகமுள்ள டால்பின் மீன் துண்டுகள், சூறை மீன்களை தூண்டிலில் கோர்த்து கடலில் வீசினால் இவ்வகை மீன்கள் தூண்டிலில் சிக்கிக் கொள்ளும்.

இதில் மயில் மீன்கள் 50 முதல் 500 கிலோ வரை இருக்கும். இம்மீன்களுக்கு மயில் தோகை போன்று இறக்கை இருக்கும் என்பதால், இதை மயில் மீன் என அழைக்கப்படுகிறது. தற்போது, ஆழ்கடல் பகுதியில் மயில் மீன் சீசன் துவங்கி யுள்ளது. கடலூர் பகுதி மீன வர்களிடம் நேற்று 50 கிலோ எடையுள்ள மயில் மீன் சிக்கியது. இதை வியாபாரிகள் வெட்டி பதப்படுத்தி கேரளா, கர்நாடகா, கோவா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய் கின்றனர். எஞ்சிய மீன்கள் கரு வாட்டிற்கு பதப்படுத்தப் படுகிறது

கடலூர் அருகே பழங்கால பிரெஞ்சு நாணயம் கண்டெடுப்பு

கடலோர கிராமமான தியாகவல்லியில் பழங்கால பிரெஞ்சு நாணயம் கண்டெடுக்கப்பட்டது.​ ​கடலூர் அருகே உள்ள தியாகவல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் சாமிக்கச்சிராயர்.​ ​ கடலூர் திரைப்பட இயக்கச் செயலாளராகவும் குறும்படத் தயாரிப்பாளராகவும் தொல்பொருள் ஆராய்ச்சியாளராகவும் இருக்கிறார்.​ சாமிக்கச்சிராயர் தனது கிராமத்தில் தொடர்ந்து தொல்பொருள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.​ ஞாயிற்றுக்கிழமை அங்குள்ள வயல் வெளியில் பழங்காலச் செப்பக்காசு ஒன்றை கண்டெடுத்தார்.​ வட்ட வடிவமான இந்தச் செப்புக் காசின் ஒரு புறம் கோழிச்சின்னமும்,​​ மறுபுறம் புதுச்சேரி 1837 என்றும் உள்ளது.இதுகுறித்துச் சாமிக் கச்சிராயர் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:​ ​கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை முதல் புதுவை மாநிலத்தில் அகழ்வாராய்ச்சி நடைபெறும் அரிக்கமேடுவரை பல்லாண்டுகளாக பழந்தமிழர் நாகரிகத்தைப் பறைசாற்றும் நாணையங்கள்,​​ பானை ஓடுகள்,​​ சுட்ட மண்ணால் செய்யப்பட்ட கலன்கள்,​​ ​ மது ஜாடிகள்,​​ பாசிமணிகள் உள்ளிட்ட பல பொருள்கள் கிடைத்து உள்ளன.​ ​

கடலூர் கடற்கரையோர கிராமங்களில் ஆங்காங்கே காணப்படும் மணல் திட்டுகள் பல காலங்களில் நடந்த கடல்கோள்களால் அழிந்த நகரங்கள்,​​ கிராமங்களின் சுவடுகளாக உள்ளன.​ அத்தகைய மணல் குன்றுகளில் இருந்துதான் இத்தகைய பழங்கால பொருள்கள் கிடைத்து வருகின்றன.​ இந்த மணல் குன்றுகள் பல ரசாயனத் தொழிற்பேட்டைகளாக மாற்றப்பட்டுவிட்டது தமிழர்களுக்குப் பேரிழப்பாகும்.​ ​தற்போது கிடைத்து இருக்கும் செப்புக்காசு கடலூர் பகுதியில் பிரெஞ்சு அரசின் நாணயங்கள் பயன்படுத்தப்பட்டு வந்ததை எடுத்துக் காட்டுகிறது.​ கிராமங்களில் கோழிக்காசு என்று முதியோர் பலர் தெரிவிக்கிறார்கள்.​ மேலும் கடலூர் பகுதிகளில் ஆபரணத் தொழிற்சாலைகள் இருந்தது முன்னரே கண்டறியப்பட்ட தகவல் ஆகும்.​ எனவே கடலூர் துறைமுகம் பழங்காலத்தில் மேன்மையுடன் செயல்பட்டு வந்ததையும் இங்கு வணிகம் சிறந்து இருந்ததையும் இந்தச் செப்புக்காசு எடுத்துக் காட்டுகிறது.​ விரைவில் இந்தக் காசு தொல்பொருள் துறையிடம் ஒப்படைக்கப்படும் என்றும் சாமிக்கச்சிராயர் தெரிவித்தார்.

கட​லூ​ரில் கடல் நீர் உள்​பு​கு​வ​தைத் தடுக்க ​ ​பெண்ணை ஆற்​றில் ரூ.12 கோடி​யில் தடுப்​பணை

கடல் நீர் உள்​பு​கு​வ​தைத் தடுக்க,​​ கட​லூர் பெண்ணை ஆற்​றில் ரூ.12 கோடி​யில் தடுப்​பணை கட்​டும் பணி தொடங்​கப்​பட்டு இருக்​கி​றது.​ ​க​ட​லூ​ரை​ யும் புதுவை மாநி​லம் கும்​தா​மேடு ​(பரிக்​கல் பட்டு ஊராட்சி)​ பகு​தி​யை​யும் இணைக்​கும் வகை​யில் இந்​தத் தடுப்​பணை கட்​டப்​ப​டு​கி​றது.​ இப்​ப​கு​தி​யில் பெண்ணை ஆற்​றின் வடக்​குக் கரை புதுவை மாநி​லத்​தி​லும்,​​ தெற்​குக் கரை கட​லூர் மாவட்​டத்​தி​லும் உள்​ளது.​ கட​லூர் அருகே தாழங்​குடா கடற்​க​ரை​யில் பெண்​ணை​யாறு கட​லில் சங்​க​மிக்​கி​றது.​ ​தா​ழங்​கு​டா​வில் இருந்து 15 கி.மீ.​ தூரம் வரை கடல் நீர் உள்​பு​குந்து விட்​டது.​ இத​னால் பெண்​ணை​யாற்​றின் கரை​யில் உள்ள கட​லூர் மாவட்​டம் மற்​றும் புதுவை மாநி​லத்​தில் உள்ள ஆயி​ரக்​க​ணக்​கான ஏக்​கர் விளை நிலங்​க​ளில்,​​ நிலத்​தடி நீர் உவர் நீராக மாறி​விட்​டது.​ இத​னால் கட​லூர் நக​ரில் குடி​யி​ருப்​புப் பகு​தி​க​ளி​லும் நிலத்​தடி நீர் உவர் நீராக மாறி​விட்​டது.​ ​எ​னவே பெண்ணை ஆற்​றில் தடுப்​ப​ணை​கள் கட்ட வேண்​டும் என்று கட​லூர் எம்​எல்ஏ கோ.அய்​யப்​பன் தொடர்ந்து சட்​டப் பேர​வை​யி​லும் மாவட்ட நிர்​வா​கத்​தி​ட​மும் கோரிக்கை எழுப்பி வரு​கி​றார்.​ புதுவை மாநில விவ​சா​யி​க​ளும் விளை நிலங்​கள் பாதிக்​கப்​ப​டு​வ​தைத் தடுக்க இதே கோரிக்​கையை முன் வைத்​த​னர்.​பு​துவை மாநி​லம் மத்​திய அர​சின் நேரடி கட்​டுப்​பாட்​டில் இருக்​கும் யூனி​யன் பிர​தே​ச​மாக இருப்​ப​தா​லும்,​​ திட்​டங்​க​ளுக்கு மத்​திய அரசு நிதி தாரா​ள​மா​கக் கிடைப்​ப​தா​லும்,​​ விவ​சா​யி​க​ளின் கோரிக்​கையை ஏற்று பெண்ணை ஆற்​றில் தடுப்​பணை கட்ட முன்​வந்து இருக்​கி​றது.​ கட​லூர் மாவட்ட நிர்​வா​கத்​தின் ஒப்​பு​த​லு​டன் இந்​தத் தடுப்​பணை,​​ புதுவை அர​சால் ரூ.12 கோடி​யில் கட்​டப்​ப​டு​கி​றது.​ ​க​ட​லூர்-​ கும்​தா​மேடு இடையே 254 மீட்​டர் நீளத்​தில் 5 அடி உய​ரத்​தில்,​​ இந்​தத் தடுப்​பணை கட்​டப்​ப​டு​கி​றது.​ கட​லூர்-​ கும்​தா​மேடு இடையே பெண்ணை ஆற்​றின் குறுக்கே இரு​மா​நில மக்​கள் பயன்​ப​டுத்​தும் பால​மா​க​வும் இது அமை​யும்.​ ​த​டுப்​பணை கட்டி முடிக்​கப்​பட்ட பின்,​​ கடல் நீர் உள்​பு​கு​வது பெரு​ம​ள​வுக்​குத் தடுக்​கப்​ப​டும் என்று எதிர்​பார்க்​கப்​ப​டு​கி​றது.​ ஆண்​டின் பெரும்​ப​குதி நாள்​கள்,​​ ​ தடுப்​ப​ணை​யில் இருந்து ஆற்​றில் குறைந்த பட்​சம் ஒரு கி.மீ.​ தூரத்​துக்கு ​ தண்​ணீர் தேங்கி நிற்​க​வும் வாய்ப்பு உள்​ளது.​ ​ இத​னால் இரு மாநி​லங்​க​ளை​யும் சேர்ந்த 5 ஆயி​ரம் ஏக்​கர் விளை நிலங்​கள் உவர் நீரில் இருந்து காப்​பாற்​றப்​ப​டும் என்​றும் எதிர்​பார்க்​கப்​ப​டு​கி​றது.​ ​பு​துவை அரசு இந்​தத் தடுப்​ப​ணை​யைக் கட்​டு​வது போல்,​​ தமி​ழக அர​சும் ​ பெண்ணை ஆற்​றில் மேலும் சில இடங்​க​ளில் தடுப்​ப​ணை​க​ளைக் கட்ட வேண்​டும்.​ அத​னால் கடல் நீர் உள்​பு​கு​வது தடுக்​கப்​ப​டு​வ​து​டன்,​​ பெண்ணை ஆற்​றில் வெள்​ளப் பெருக்கு ஏற்​பட்டு ஆண்​டு​தோ​றும் வீணா​கக் கட​லில் கலந்​து​கொண்டு இருக்​கும் நீர்,​​ தடுப்​ப​ணை​க​ளில் தேக்கி வைக்​கப்​பட்டு,​​ இப்​ப​கு​தி​க​ளில் நிலத்​தடி நீர் மட்​டம் உயர ஏது​வாக இருக்​கும் என்​றும் எம்​எல்ஏ அய்​யப்​பன் தெரி​வித்​தார்.

இன்னும் 40 ஆண்டுகளில் துறைமுக நகரங்கள் நீரில் மூழ்கும் அபாயம் : நெய்வேலி பேராசிரியர் கருத்து

நெய்வேலி புதுநகர், 14-வது வட்டம் ஜவகர் அறிவியல் கல்லூரியில், குடிமக்கள், நுகர்வோர் மற்றும் நாட்டு நலப் பணித்திட்டம் இணைந்து “உலக வெப்பமயமாதல்” விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தினர்.

ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் விவே கானந்தன் வரவேற்றார். தமிழ்த்துறை பேராசிரியரும் குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளருமான தியாகராஜன் தலைமை தாங்கினார். உலக சுற்றுப் புறச்சூழல் துறை பேராசிரியர் முருகவேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசும்போது கூறியதாவது:-

இன்றைய தினம் உலக நாடுகள் அனைத்தும் உலக வெப்ப மயமாகி வருவதை எண்ணி திகிலடைந்த வண்ணம் உள்ளனர். பல பனிப்பிரதேச நகரங்கள் உலககெங்கும் உலக வெப்ப மயமாவதால் உருகி கடல் மட்டம் உயர்ந்து அழிந்து வருகிறது.

இதேபோல் நீடித்தால் இன்னும் 40 ஆண்டுகளில் இந்தியாவில் சென்னை, கல்கத்தா, மும்பை உள்ளிட்ட பல்வேறு துறைமுக நகரங்கள் நீரில் மூழ்கி இருந்த இடமே தெரியாமல் போக வாய்ப்புள்ளது.

எனவே சுற்றுப்புற சூழழை பாதுகாத்து உலக வெப்பமயமாதலை எதிர்த்து போராட வேண்டிய கால கட்டத்தில் உள்ளோம். இதை உணர்ந்து மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும்.

இவ்வாறு பேராசிரியர் முருகவேல் பேசினார். தொடர்ந்து மாணவ- மாணவிகளின் கேள்விகளுக்கு பேராசிரியர் பதில் அளித்து விளக்கம் கூறினார்.