கடலூர் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் 2010 செப்டம்பர் மாதம் முடிவடையும் என்று, குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் கே.ரகுநாதன் தெரிவித்தார்.
இது தொடர்பாக குடிநீர் வாரிய செயற் பொறியாளர் ரகுநாதன் செய்தியாளர்களிடம் கூறியது:
கடலூர் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் 4 பிரிவுகளாக மேற்கொள்ளப்படுகின்றன. தெருக்களில் ஆள்கள் நுழையும் தொட்டிகள் அமைக்கும் பணி உள்ளிட்ட முதல்பிரிவு பணிகள் வரும் டிசம்பருக்குள் முடிவடையும்.
தொட்டிகள் இணைப்பு உள்ளிட்ட 2-வது பிரிவு பணிகள் 2010 பிப்ரவரி மாதம் முடிவடையும்.
கழிவு நீரேற்று நிலையங்கள் அமைக்கும் 3-வது பிரிவு பணிகள் நகராட்சி உரிய காலத்தில் நிலம் கையகப்படுத்திக் கொடுத்தால், 2010 ஏப்ரல் மாதம் முடிவடையும்.
சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் 4-வது பிரிவுப் பணிகள் 2010 செப்டம்பர் மாதம் முடிவடையும்.
பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளுக்காக 150 கி.மீ. நீளச் சாலைகள் எடுத்துக் கொள்ளப்பட்டன.
அதில் 126 கி.மீ. தூரம் முடிக்கப்பட்டு விட்டது. 115 கி.மீ. நீளச் சாலைகள் சம்பந்தப்பட்ட துறைகளிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது.
தேசிய நெடுஞ்சாலையில் 7.1 கி.மீ. நீளத்துக்கு பணிகள் நடைபெற வேண்டியது இருக்கிறது.
ரூ. 21 கோடிக்கான பணிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.
சாலைகள் சீரமைப்புக்கு, நெடுஞ்சாலைத் துறைக்கு ரூ. 2 கோடி வழங்கி இருக்கிறோம். நகராட்சி மூலம் ரூ. 16.98 கோடி விடுவிக்கப்பட்டு உள்ளது.
வேறு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை பாதாளச் சாக்கடைத் திட்டத்துக்கு செலவிட்டு இருக்கிறோம்.
நகராட்சியிடம் இருந்து ரூ. 10 கோடி நிதி வரவேண்டியது இருக்கிறது என்றார் ரகுநாதன்.
உடனிருந்த கடலூர் நகராட்சித் தலைவர் து.தங்கராசு கூறியது:
பாதாள சாக்கடைத் திட்டத்துக்காக, ரூ. 10 கோடி நிதி விடுவிக்குமாறு கேட்டு இருக்கிறோம். சாலைகளை சீரமைக்க ரூ. 12 கோடி கடன் கேட்டு இருக்கிறோம்.
பாதாள சாக்கடைத் திட்டத்துக்காக பொதுமக்களிடம் இருந்து ரூ. 15 கோடி வசூலிக்க வேண்டியது இருக்கிறது என்றார் தங்கராசு.
ஆய்வுக் கூட்டத்தில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
குடிநீர் வாரிய அதிகாரிகள், பணிகளை முடித்து சாலைகளை ஒப்படைத்து விட்டோம் என்றும், நெடுஞ்சாலைத்துறை மற்றும் நகராட்சி அதிரிகாரிகள் அதற்கு மறுப்பும் தெரிவித்தனர்.