கோரிக்கை பதிவு

திருவந்திபுரம் கோயிலில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா

கடலூர் அருகே திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயிலில் கர்நாடக முதல்வர் எடியூரப்பை வியாழக்கிழமை சாமி கும்பிட்டார்.இதற்காக எடியூரப்பா வியாழக்கிழமை காலை ஹெலிகாப்டர் மூலம் புதுவை வந்தார். அங்கிருந்து காரில் கடலூர் வழியாகத் திருவந்திபுரத்துக்கு காலை 9 மணிக்கு வந்தார். அவரை மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ், அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜெகநாதன், கோயில் நிர்வாக அலுவலர் கிருஷ்ணகுமார், பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன் உள்ளிட்டோர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.பின்னர் காரில் எடியூரப்பா திருவந்திபுரம் மலை மீதுள்ள லட்சுமி ஹயகிரீவர் ஆலயத்துக்குச் சென்றார். கோயில் வாயிலில் மேளதாளம் முழங்க அர்ச்சகர்கள் நீலமேகப் பட்டாச்சாரியார், நரசிம்ம பட்டாச்சாரியார் உள்ளிட்டோர் வரவேற்றனர். கோயிலில் எடியூரப்பா சிறப்பு வழிபாடுகள் செய்தார். அங்கிருந்து படிக்கட்டுகள் வழியாக நடந்து தேவநாதசாமி கோயிலுக்கு வந்தார். அங்கும் எடியூரப்பாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.எடியூரப்பா வருகையை முன்னிட்டு தேவநாத சுவாமி கோயிலில் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு இருந்தன.சிறப்பு பூஜைகளை முடித்துக் கொண்டு எடியூரப்பா 10-07 மணிக்கு மீண்டும் புதுவை மாநிலம் சென்றார். அவரது வருகையை முன்னிட்டு கடலூரில் புதன்கிழமை மாலை முதலே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.  போலீஸ் உத்தரவின்பேரில் திருவந்திபுரத்தில் பிரதானக் கடை வீதிகளில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. எடியூரப்பா செல்லும் பாதை முழுவதும், வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்தது. கோயில் வாயிலில் மெட்டல் டிடெக்டர் சோதனை நடத்தப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக