கோரிக்கை பதிவு

கடலூர் லாரன்ஸ் ரோட்டில் விரைவில் சுரங்க பாதை பணிகள் தொடங்கும் நெடுஞ்சாலை துறை அதிகாரி தகவல்

கடலூர் நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மேம்பாலம் மற்றும் சுரங்கப்பாதை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். பல்வேறு பொதுநல அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் போராட்டங்களை தொடர்ந்து ரூ.14 கோடி செலவில் சூரப்பன் சாவடியில் மேம்பாலமும் கடலூர் லாரன்ஸ் ரோட்டில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் சுரங்கப்பாதை அமைக்கவும் அரசு நிதி ஒதுக்கீடு செய்தது.
இதையடுத்து ரூ.14 கோடி மதிப்பீட்டில் கடலூர் சூரப்பன் சாவடியில் மேம்பாலம் அமைக்கப்பட்டது. ஆனால் லாரன்ஸ் ரோட்டில் சுரங்ப்பாதை அமைக்கும் பணி நிதி ஒதுக்கீடு செய்தும் நடைபெறவில்லை. சுரங்கப்பாதை அமைக்க கோரி பல்வேறு பொதுநல இயக்கங்கள் போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. கடலூர் அனைத்து குடியிருப்போர் சங்கத்தினரும் சுரங்கப் பாதை அமைக்க கோரி போராட்டத்தில் ஈடு பட்டனர்.
இந்த நிலையில் கடலூர் அனைத்து குடியிருப்போர் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் மருதவாணனுக்கு கடலூர் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் செல்வம் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கடந்த 5-10-2000 அன்று ரூ.14 கோடி செலவில் மேம்பாலம் அமைக்க அனுமதி அளித்த வகையில் லாரன்ஸ் சாலை சுரங்கப்பாதைக்கு ரூ.1 கோடி அனுமதி அளிக்கப்பட்டது. இது குறைவான மதிப்பீட்டில் இருப்பதால் சுரங்கப்பாதை திட்டம் ரூ.5.37 கோடியில் தயாரிக்கப்பட்டு மற்றும் மின் கம்பிகள் குடிநீர் குழாய்கள் விளக்கு வசதி உள்ளிட்டவற்றிற்கு ரூ.1.83 கோடி ஒதுக்கப்பட்டு ரூ.7.20 கோடி திட்டத்திற்கு நிதித்துறை அனுமதி அளித்துள்ளது.

லாரன்ஸ் சாலை சுரங்கப்பாதை வடி வமைப்பு என்பது தலைமை பொறியாளர் (நெடுஞ்சாலைத்துறை) இறுதிப்படுத்தப்படுகிறது. இறுதியில் வடிவமைப்பு இறுதி செய்யப்பட்ட உடன் ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகள் லாரன்ஸ் சாலையில் உடனடியாக தொடங்கப்படும். லாரன்ஸ் சாலையில் ரயில் போக்குவரத்து ஆரம்பித்தாலும் இந்த சுரங்கப்பாதை வடி வமைப்பின்படி இப்பணிகள் தொடங்கும்.

இவ்வறு அதில் கூறப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்துக்கு சட்டமன்ற மதிப்பீட்டுக்குழு 21-ந் தேதி வருகை

தமிழ்நாடு சட்டசபை மதிப்பீட்டு குழுவினர் தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக சென்று ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். வருவாய்துறை வளர்ச்சி பணிகள் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் சட்டசபை மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு செய்து வருகிறார்கள். குத்தாலம் தொகுதி எம்.எல்.ஏ. அன்பழகன் தலைமையில் மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு செய்து வருகிறார்கள்.
கடலூர் மாவட்டத்திலும் சட்டமன்ற மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு பணிகளை மேற்கொள்கிறார்கள். அதன்படி வருகிற 21-ந் தேதி மதிப்பீட்டு குழுவினர் கடலூர் வருகிறார்கள். பின்னர் மதிப்பீட்டுக்குழு தலைவர் அன்பழகன் தலைமையில் இக்குழுவினர் மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்கிறார்கள்.
கடலூர், பண்ருட்டி, நெல்லிக்குப்பம் பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் சட்டமன்ற மதிப்பீட்டு குழுவினர் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்கிறார்கள். உணவு மற்றும் நுகர்பொருள் பாதுகாப்பு, ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள், தொடக்க பள்ளிகள், நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள், மாவட்ட நிர்வாகம், வருவாய்துறை மற்றும் பணிகள் வளர்ச்சி குறித்து இக்குழுவினர் ஆய்வு மேற்கொள்கிறார்கள்.

பின்னர் அன்று மாலை கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் சட்டமன்ற மதிப்பீட்டு குழுவினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் , மாவட்ட அளவிலான அலுவலர்கள் பங்கேற்கும் ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது.

கடலூர் மாவட்டத்தில் இலங்கை அகதிகள் முகாம்களை மேம்படுத்த ரூ.31 லட்சம் ஒதுக்கீடு கலெக்டர் தகவல்

தமிழ்நாட்டில் இலங்கை தமிழர்கள் தங்கி உள்ள முகாம்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களுக்கு தமிழக அரசு ரூ.30 லட்சத்து 98 ஆயிரம் நிதி ஒதுக்கி உள்ளது.
காட்டுமன்னார் கோவில் அகதிகள் முகாமுக்கு ரூ.8 லட்சத்து 38 ஆயிரமும், குறிஞ்சிப்பாடி முகாமுக்கு ரூ.6 லட்சத்து 80 ஆயிரமும், விருத்தாசலம் முகாமுக்கு ரூ.9 லட்சத்து 20 ஆயிரமும், அம்பலவாணன் பேட்டை முகாமுக்கு ரு.6 லட்சத்து 65 ஆயிரமும் ஒதுக்கப் பட்டுள்ளது.இந்த நிதி புதிய குடிநீர் குழாய்கள் அமைத் தல், மின் பழுது நீக்கல், தெருவிளக்கு மற்றும் புதிய கழிப்பறைகள் கட்டுதல் போன்றவற்றுக்கு செவிடப்படுகிறது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் தங்கி உள்ள வர்களில் கலைஞர்காப்பீட்டு திட்டத்தின் கீழ் 532 பேருக்கு அடையாள அட்டையும், 425 பேருக்கு இலவச கலர் டி.வி.யும், 13 பேருக்கு இலவச பஸ் பாசும், 45 பேருக்கு ஓட்டுனர் உரிமமும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 1,333 மாணவ-மாணவிகளுக்கு பட்டம்: கவர்னர் பர்னாலா 22-ந்தேதி வழங்குகிறார்


சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 77-வது பட்டமளிப்பு விழா வருகிற 22-ந் தேதி காலை 11 மணிக்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மண்டபத்தில் நடக்கிறது.
விழாவில் தமிழக கவர்னரும், பல்கலைக்கழக வேந்தருமான சுர்ஜித்சிங் பர்னாலா கலந்து கொண்டு 2008-2009-ம் கல்வி ஆண்டில் பட்டம் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பட்டங்களையும், பல் வேறு அறக்கட்டளை பரிசு களையும் வழங்குகிறார்.
விழாவில் நேரடியாக 1, 333 மாணவர்களுக்கு பட்டங்களையும், இதில் பல்வேறு பாடங்களில் முதன்மை தேர்ச்சி பெற்ற 145 மாணவ- மாணவிகளுக்கு தங்கப்பதக்கம் மற்றும் ரொக்கப்பரிசுகளையும் கவர்னர் பர்னாலா வழங்குகிறார்.
இதில் 264 (எம்.பில், 62 பி.எச்டி, 201,டி.எஸ்.சி.1) மாணவர்கள் ஆராய்ச்சி பட்டங்கள் பெறுகிறார்கள்.
நேரடி சேர்க்கை மூலம் பயின்று பட்டம் பெறும் மாணவர்கள் 6,114 பேர், தொலைதூர கல்வி இயக்க கம் மூலம் பட்டம் பெறும் மாணவர்கள் 97,413 பேர் உள்பட மொத்தம் 1 லட்சத்து 35 ஆயிரத்து 27 மாணவ- மாணவிகள் பட்டம் பெறுகின்றனர்.
விழாவில் புதுடெல்லி மானியக்குழு துணை தலைவர் பேராசிரியர் வேத் பிரகாஷ், கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா சிறப்புரை ஆற்றுகிறார். விழாவில் பல்கலைக்கழக இணைவேந்தர் எம்.ஏ.எம்.ராமசாமி எம்.பி. கலந்து கொள்கிறார். பல்கலைக்கழக துணை வேந்தர் (டாக்டர் ராமநாதன்) ஆண்டறிக்கை வாசிக்கிறார். விழா ஏற்பாடுகளை பல்கலைக் கழக நிர்வாகம் செய்து வருகிறது.
இவ்வாறு பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் ராமநாதன் கூறினார்.
பேட்டியின் போது துணைவேந்தரின் நேர்முக உதவியாளர் ராஜசேகர், மக்கள் தொடர்பு அதிகாரி செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.
பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா 21-ந் தேதி மாலை 6 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் பல்கலைக்கழக துணைவேந்தர் பங்களா வந்தடைகிறார். இதற்காக பல்கலைக்கழக வேளாண் கல்லூரி ஹெலிகாப்டர் தளத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

நேற்று ஹெலிகாப்டர் தளத்தில் ஹெலிகாப்டரை இறக்கி ஒத்திகை பார்க்கப்பட்டது. மேலும் ஹெலிகாப்டர் இறங்கும் தளம், பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

நம்மவர்களையே அடித்த கடலோரக் காவல்படை! -கசந்துபோன கடலூர் மீனவர்கள்

நம்மவர்களையே அடித்த கடலோரக் காவல்படை!
-கசந்துபோன கடலூர் மீனவர்கள்

கடலுக்குள் 25 கிலோ மீட்டரை கடந்து மீன் பிடிக்கக் கூடாது என்ற புதிய சட்டம் வரப்போகிறதாம். இந்த மீன்பிடி மசோதாவை சட்டமாக்க மத்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இந்த மசோதா மீனவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று ஆந்திர, கேரள மீனவர்கள் எதிர்ப்புக்குரல் எழுப்பியதைத் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி இருக்கிறது மீன்பிடி மசோதா.


இந்த நிலையில், கடந்தவாரம் கடலூர் மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்ல, ‘25 கிலோ மீட்டர் தாண்டி ஏன் வந்தீர்கள்?’ என்று கேட்ட கடலோரக் காவல்படையினர் அவர்களை அடித்து அவர்களின் படகையும் சேதப்படுத்தினர். இச்சம்பவத்துக்குப் பிறகு வெடவெடத்துக் கிடக்கிறார்கள்.

25 கிலோ மீட்டர் கடந்து மீன்பிடிக்கக் கடலுக்குள் செல்லக் கூடாது என்பது மீன்பிடி மசோதாவின் ஓர் அங்கம். இதைக் கண்டித்தும், தாக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கவும், மீனவர்களை சுதந்திரமாகச் செயல்பட வலியுறுத்தியும் கடலூர் மாவட்ட மீனவ அமைப்புகளான ‘விடுதலை மீனவ வேங்கைகள்,’ ‘வீரவிடுதலை வேங்கைகள்’, ‘மீனவர் விடுதலை வேங்கைகள் இயக்கம்’ உள்ளிட்ட அமைப்புகள் கண்டன போஸ்டர், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என போராட்டத்தில் குதித்துள்ளன.

கடலோரக் காவல் படையினரால் தாக்கப்பட்ட மீனவர் முருகனை சந்தித்தோம்.

“போனவாரம் சாயங்காலம் மூணு மணிக்கு அஞ்சு படகுல தொழிலுக்குப் போனோம். முப்பது கிலோ மீட்டர் போய் வலையை விரிச்சோம். அப்போ, எங்ககிட்ட வந்து நின்ன ஒரு கப்பலிலிருந்து வெள்ள டிரெஸ் போட்ட ஆபீசருங்க அஞ்சு பேர் வந்தாங்க.

நாங்க இருந்த படகுலயே இறங்கிட்டாங்க. எங்ககிட்ட வந்து துப்பாக்கிய காட்டி மிரட்டினாங்க. எவ்ளோ சொல்லியும் கேட்காம எங்களை அடிச்சாங்க. ‘அடையாள அட்டை கொடு’ என்று கேட்டார்கள். எங்கக்கிட்ட இல்லை. அதுக்குள்ள படகுல இருந்த வலையை எல்லாம் சேதப்படுத்திட்டாங்க.

அவங்களுக்குப் பயந்து நாங்க கரைக்குத் திரும்பிட்டோம். மீன்வளத்துறை தனி அதிகாரி அப்பர்கிட்ட இதுபற்றிச் சொன்னோம். அவர் எங்கக்கிட்ட புகார் எழுதி வாங்கிக்கிட்டாரு. 15 வருஷமா தொழில் செய்யறோம். இதுபோல நடந்ததேயில்லை. இது எங்களுக்குப் புதுசா இருக்கு. அதனால தொழிலுக்குப் போகவே பயமா இருக்கு.

இதுசம்பந்தமா கலெக்டரை போய்ப் பார்த்து சொன்னோம். அவரும் எங்க ஊருக்கு வந்து சமாதானம் சொல்லிட்டு, விசாரிக்கறதா சொல்லியிருக்காரு. இதுக்கு ஒரு தீர்வு வராம கடலுக்குப் போறதில்லைன்னு முடிவு பண்ணியிருக்கோம். ஒருவாரமா தொழிலுக்குப் போகலை” என்றார் சோகத்தோடு.

இவரைத் தொடந்து ஊர்ப் பிரமுகரான சாமிநாதனிடம் பேசினோம்.

“கடலம்மாவை நம்பி எங்க ஊருல 700 குடும்பங்கள் இருக்கு. ஆனா இந்தக் கடலோரக் காவல்படை போலீஸ்காரங்க திடீர்னு முரட்டுத்தனமாத் தாக்கியிருக்காங்க. கேட்டா, ‘25 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல வராதீங்க’ன்னு சொல்றாங்க.

ஆழமான பகுதியிலதான் வெலை உசந்த மீன்கள் கிடைக்கும். இதையே நம்பி வாழும் எங்களை இதைச் செய்யாதீங்க.. அதைச் செய்யாதீங்கன்னு சொன்னா எப்படி? இதுவரைக்கும் மீன்பிடிக்க எந்தச் சட்டதிட்டமும் எங்களுக்கு இருந்ததில்லை. இப்பதான் ஏதோ புதுசா சொல்றாங்க.

படகுல இத்தனை பேருதான் போகணும்னு வரைமுறைப் படுத்துறாங்க. இதுசம்பந்தமா எங்களுக்கு எந்தத் தகவலும் சொல்லலை. இவங்களா ஒரு சட்டத்தை வச்சிக்கிட்டு எங்களை வஞ்சிக்கிறாங்க. செல்வநாதன், கோபி, அமிர்தலிங்கம், கார்த்திகேயன், ஆறுமுகம், மனோகரன், முருகன்னு மீன்பிடிக்கப் போன பலரையும் அடிச்சி அவங்க படகையும் சேதப்படுத்தி வலையையும் அபகரிச்சிக்கிட்டாங்க. இதற்கான நிவாரணத்தை உடனடியா வழங்க மாவட்ட நிர்வாகம் முன்வரணும். ‘நீங்க எல்லாம் உடனே அடையாள அட்டை வாங்கிக்கணும்னு சொல்லுறாரு கலெக்டரு. தொழிலுக்குப் போற நாங்க உயிரையே கையில பிடிச்சிட்டு போய்வர்றோம். இதுல அடையாள அட்டையை எங்க பாதுகாக்கிறது” என்றார்.

இதுகுறித்து கடலூர் மாவட்ட கலெக்டர் சீத்தாராமனைச் சந்தித்து விளக்கம் கேட்டோம். “இப்படி ஒரு சம்பவம் இதுதான் முதன்முறை. இது சம்பந்தமாகக் கடலோரக் காவல் படை அதிகாரிகளிடம் பேசினேன். ‘இனிமேல் இப்படி ஒரு தவறு நடக்காது’ என்று உறுதியளித்திருக்கிறார்கள். மாவட்ட நிர்வாகம் சார்பாக அடையாள அட்டைகள் வழங்கும் பணி தொடங்கியுள்ளோம். இனிமேல் இவங்க தொழிலுக்குப் போகும்போது அடையாள அட்டை மற்றும் அவர்கள் பயன்படுத்தும் படகு சம்பந்தமான சான்றிதழ் நகல்களை எடுத்துச் செல்லவேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறோம். இவற்றை உரிய முறையில் பாதுகாப்பாக எடுத்துச் சென்று மீனவர்களும் எங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்” என்றார்.

இதுகுறித்து தொகுதி எம்.எல்.ஏ. ஐயப்பனிடம் பேசினோம்.

“இந்தச் சம்பவம் கேள்விப்பட்ட உடனே விசாரிக்கத் தொடங்கினேன். எப்போதும்போல கடலோரக் காவல் படையினர் மீனவர்களை விசாரணை செய்வது வழக்கம். அப்போது இந்த மீனவர்களிடம் எந்த ஆதாரமும் இல்லாததால் இவர்களைத் தாக்கியிருக்கிறார்கள். உடனே அதுசம்பந்தமான அதிகாரிகளிடம் பேசினேன். அதில் சிங் என்ற உயர் அதிகாரி ஒருவர் இந்தச் சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர், எஸ்.பி. உள்ளிட்டோரை அழைத்துச் சென்று அந்த ஊரில் சமாதானக் கூட்டம் போட்டு அவர்களை மீண்டும் தொழிலுக்குப் போகும்படி வலியுறுத்தி உள்ளேன். விரைவில் தொழிலுக்குச் செல்வார்கள் என நம்புகிறேன்” என்றார் ஐயப்பன்.

இப்போதே மீனவர்களுக்கு உள்ளூர் போலீஸ், கடலோரக் காவல்படை, கடற்படை என மூன்றடுக்குத் தொல்லை இருக்கிறது. இந்நிலையில் இந்திய அரசு கொண்டுவரப் போகும் இந்தப் புதிய மசோதா, மீனவர்களை மேலும் துன்பத்தில் ஆழ்த்தும் என்பதில் ஐயமில்லை.

எய்ட்ஸ் மறுவாழ்வு மையத்தை வேறு இடத்திற்கு மாற்ற உத்தரவு

கடலூர் புதுப்பாளையத்தில் இயங்கி வரும் எய்ட்ஸ் நோயாளிகள் மறுவாழ்வு மையத்தை வேறு இடத்திற்கு மாற்ற சுகாதார பணிகள் இணை இயக்குனர் ஜெயவீரக்குமார் உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
கடலூர் புதுப்பாளையம் சீனிவாசன் பிள்ளைத் தெருவில் மாடர்ன் கல்வி மற்றும் சமூக சேவை மையம் சார்பில் ஏப்ரல் மாதம் முதல் எய்ட்ஸ் நோயாளிகள் மறுவாழ்வு மையம் நடத்தப்பட்டு வருகிறது.இந்த மறுவாழ்வு மையத்தில் போதிய பராமரிப்பு இல்லாததால் அருகில் வசிப்பவர்களுக்கு டி.பி., உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. கழிவறைகள் சுத் தமாக இல்லை. இதனால் குழந்தைகளுக்கு நோய் பரவும் அபாயமுள்ளதாகவும், மையத்தை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.அதன்பேரில் எய்ட்ஸ் நோயாளிகள் மறுவாழ்வு மையத்தை ஆய்வு செய்தபோது அங்கு தற்போது மூன்றுபேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். போதிய பராமரிப்பு இருந்தாலும் அருகில் வீடுகள் உள்ளதால் மையத்தை வேறு இடத்திற்கு மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. ஜனவரி 31ம் தேதிக்குள் மையம் வேறு இடத்தில் மாற்றி அமைப்பதாக மறுவாழ்வு மைய நிர்வாகி திருமால் தெரிவித்துள்ளதாக கூறினார்.

கடலூரில் முக்கிய இடங்களில் 'கேமரா' : பாதுகாப்பு கருதி போலீசார் நடவடிக்கை


கடலூர் காவல் துறை சார்பில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் திருப்பாதிரிப்புலியூரில் நடந்தது. டி.எஸ்.பி., ஸ்டாலின் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர்கள் ஆரோக்கியராஜ், ஏழுமலை, தம்புசாமி, சப் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு, ஆனந்தபாபு, மோகன், கோவிந்தராஜ், வள்ளி விலாஸ் பாலு, அழகப்பா ராஜகோபால், ஓட் டல் அபிநயா ராம ஜனார்த்தனன், ஆனந்தபவன் வெங்கடசுப்பு மற் றும் வியாபாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையம், ரயில்வே ஸ்டேஷன் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு, போலீசாருடன் பொதுமக் கள் மற்றும் வியாபாரிகளின் பங்களிப்பு குறித்தும் விவாதிக்கப் பட்டது.


டி.எஸ்.பி., ஸ்டாலின் பேசுகையில் "தற்போது நாட்டில் நிலவும் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு நிலைகளில் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியுள்ளது. முக்கியமாக மக் கள் அதிகளவில் கூடும் நகை கடை, ஜவுளிக் கடை, சினிமா தியேட்டர், ஓட்டல்கள் போன்றவைகள்தான் அவர்களின் இலக்காக இருக்கும். இதுபோன்ற அச்சுறுத்தல் நமது மாவட்டத்தில் இல்லையென்றாலும் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு கருதி நாம் செயல்பட வேண்டும். வியாபாரிகள் தங்கள் நிறுவனங்களில் உள்ளே மற்றும் வெளியே செல்லும் இடங்களில் கேமரா பொருத்தியிருக்க வேண்டும்.நிறுவனத்தில் பணிபுரியும் ஆட் கள் குறித்து முழு விவரங்களையும் அவர்களது போட்டாவையும் வைத் திருக்க வேண்டும். இதற்காக தனியாக புத்தகம் பராமரிக்க வேண்டும். நிறுவனத்திற்கு சந்தேகப்படும்படியான நபர்கள் வந்தால் உடனடியாக எங்களை தொடர்பு கொள்ள வேண்டும்.நகரில் முக்கிய இடங்களில் "கேமரா' பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்பு அவசியமாக கருதப்படுகிறது' என பேசினார்.