கோரிக்கை பதிவு

வேகமாக பரவி வரும் சிக்குன் குனியா : அரசு மருத்துவமனைகளில் கூட்டம்


பருவ நிலை மாற்றத்தால் காய்ச்சல் மற்றும் சிக்குன் குனியா நோய் தாக்குதல் அதிகரித்து வருவதால் அரசு மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

                                                             
கடலூர் மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களாக பருவநிலை திடீர், திடீரென மாறுவதால் சளி, இருமல், காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வந்தது. இந்நிலையில் கடந்த மாதம் ஒரு வாரம் பெய்த கனமழைக்கு பின்னர் சிக்குன் குனியா நோய் மாவட்டம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சல் கண்டவர்களுக்கு மூட்டுகளில் வலி ஏற்படுவதால் நடக்கக்கூட முடியாத நிலை ஏற்படுகிறது.
சிக்குன்குனியா நோய் தாக்குதலால் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளின் கூட்டம் பல மடங்கு அதிகரித்துள்ளது. இருப்பினும் இந்நோய்க்கு அரசு மருத்துவமனைகளில் போடப்படும் ஊசி மற்றும் மருந்துகளுக்கே கட்டுப்படுகிறது. இதனால் கடந்த 15 நாட்களாக அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவிற்கு நோயாளிகளின் வருகை பலமடங்கு அதிகரித்துள்ளது.
கடலூர் அரசு மருத்துவமனையில் வழக்கமாக மூவாயிரம் புறநோயாளிகள் வருவார்கள். ஆனால் கடந்த 10 நாளாக தினசரி 4,500க்கும் மேற்பட்டோர் வருகின்றனர். இதேபோன்று சிதம்பரத்தில் 2,500 பேரும், விருத்தாசலத்தில் 1,500 பேரும், குறிஞ்சிப் பாடியில் 650 ருலிருந்து 1000 பேர் வரை புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் சிக்குன் குனியா நோயால் பாதிக்கப்பட்டிருப்பதை உறுதி செய்து கொண்ட மாவட்ட சுகாதாரத்துறை, அரசு மருத்துவமனைகளில் அதிகளவு காய்ச்சல் மற்றும் வலிக்கான மருந்து மாத்திரைகள் இருப்பு வைக்க ஏற்பாடு செய்துள்ளது. மேலும் மருத்துவமனைக்கு வரும் புறநோயாளிகளுக்கு விரைந்து சிகிச்சை அளிக்க கூடுதல் டாக்டர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர்.இது குறித்து மாவட்ட அரசுபொது மருத்துவமனை இணை இயக்குநர் டாக்டர் ஜெயவீரக்குமார் கூறியதாவது:

வழக்கம்போல் வைரஸ், சளி, இருமல், டைபாய்டு காய்ச்சலுடன் சிக்குன் குனியா நோய் தாக்குதல் உள்ளது. மழை விட்டு தேங்கும் சுத்தமான தண்ணீரில் உருவாகும்"ஏஜிடி' வகை கொசுக்கள் மூலம் சிக்குன் குனியா நோய் பரவுகிறது. இதனால் மூட்டுகளில் சவ்வுகள் பாதிக்கப்பட்டு வீக்கம் ஏற்படும். பாதங்களில் வீக்கம் காணப்படும்.
இந்த வகை கொசுக்கள் உருவாகாமல் தடுப்பதற்கு வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த வகை கொசுக்கள் பகலிலும் கடிக்கும் என்பதால் அலட்சியம் செய்யாமல் உடல் முழுவதும் கவர் செய்யும் விதமான உடைகளை அணிய வேண்டும். வீடுகளில் கொசுவலையை பயன்படுத்த வேண்டும்.
குளிப்பதற்கு மற்றும் துணி துவைப்பதற்காக உபயோகத்திற்கு மட்டும் பயன்படுத்தும் தண்ணீரீல் 30 எம்.எல்., அளவிற்கு மண்ணெண்ணெய் ஊற்றினால் இந்த வகை கொசு உருவாகாது.
   குடிப்பதற்கும் சமையல் செய்ய பயன்படுத்தப்படும் தண்ணீர் உள்ள தொட்டிகளில் இதை கண்டிப்பாக கலக்கக்கூடாது. இதற்கென தனியாக மருந்து மாத்திரைகள் கிடையாது. காய்ச்சல் மற்றும் வலிக்கு டாக்டர் பரிந்துரை செய்யும் மாத்திரைகளை தொடர்ந்து உட்கொண்டால் போதுமானது. நோய் குணமாகி 10 அல்லது 15 நாட்களுக்கு உடன் வலி மற்றும் மூட்டுகளில் வலி இருக்கும். இதனால் அச்சம் அடையத் தேவையில்லை.அரசு மருத்துவமனைகளில் காய்ச்சல் காரணமாக வழக்கத்தை விட 10 சதவீதம் நோயாளிகள் அதிகரித்துள்ளனர். தீவிர சிகிச்சையால் மாவட்டத்தில் பல இடங்களில் நோய் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. கடலூர் அரசு மருத்துவமனைக்கு மூன்று மாதத்திற்கு தேவையான நாய்க்கடி ஊசி 10 லட்சம் மதிப்பிலும், 25 லட்சம் மதிப்பில் மற்ற நோய்களுக்கான மருந்து மாத்திரைகள் இருப்பு உள்ளது. மற்ற தாலுக்கா மருத்துவமனைகளுக்கு தேவையான அளவிற்கு மருந்து மாத்திரைகள் இருப்பு உள்ளது என தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக