கோரிக்கை பதிவு

ரயில்வே சுரங்கப்பாதை கோரி கடலூர் பொதுநல அமைப்புகள் திருச்சியில் இன்று ஆர்ப்பாட்டம்

கடலூர் லாரன்ஸ் சாலையில் ரயில்வே சுரங்கப்பாதை திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. கடலூர் பொதுநல அமைப்புகள் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.போக்குவரத்து நெரிசல் மிகுந்த லாரன்ஸ் சாலையில் உள்ள ரயில்வே கேட்டில், சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்பதே கடலூர் மக்களின் நீண்டகால கோரிக்கை. ரயில்வே மேம்பாலத் திட்டத்துடன், சுரங்கப்பாதை திட்டமும் நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டும் திட்டம் நிறைவேறவில்லை. வரும் 15-ம் தேதி முதல் விழுப்புரம்-மயிலாடுதுறை மார்க்கத்தில் ரயில்கள் இயக்கப்படும் என்று எதிர்பார்க்ககப்படுகிறது. எனவே ரயில்கள் இயங்கத் தொடங்கியதும் லாரன்ஸ் சாலையில் ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படும் என்பதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாகும். அதனால் சுரங்கப்பாதை திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று கடலூர் பொதுநல அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. ரயில்வே துறையில் இருந்து முறையான தகவல்கள் வெளியாகாததால் ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் அலுவலகம் முன், 6-4-2010 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக கடலூர் பொது நல அமைப்புகள் அறிவித்து இருந்தன. ஆர்ப்பாட்டம்  நடத்துவதற்காக பஸ்கள் மற்றும் கார்களில் பொதுநல அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இன்று காலை 6 மணிக்கு கடலூரில் இருந்து புறப்பட்டு திருச்சி செல்கிறார்கள் என்று பொதுநல அமைப்புகளின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எம்.நிஜாமுதீன், கடலூர் நகர அனைத்து குடியிருப்போர் சங்க கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மு.மருதவாணன் ஆகியோர் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக