கோரிக்கை பதிவு

நன்கொடை இல்லை என கடைகளில் அறிவிப்பு பலகை

நன்கொடை வழங்க மாட்டோம் என்று கடைகளில் அறிவிப்புப் பலகை வைக்க வேண்டும் என்று வியாபாரிகளை, வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் வலியுறுத்தி கேட்டுக் கொண்டார். கடலூரில் மாமூல் கேட்டு ரவுடிகள் இனிப்புக் கடைமீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக, விசாரிப்பதற்காக வெள்ளையன் வெள்ளிக்கிழமை கடலூர் வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் வெள்ளையன் கூறியது:  ரவுடிகள் மாமூல் வசூல் செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. இதில் வணிகர்கள் ஒற்றுமையுடன் இருந்து இப்பிரச்னையை அணுக வேண்டும். கடலூரில் இத்தகைய பிரச்னைகளுக்கு போலீஸôர் உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பது பாராட்டுக்கு உரியது.வன்முறைகள் தொடரா வண்ணம் இருக்க வியாபாரிகள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். நன்கொடை இல்லை, மாமூல் வழங்க மாட்டோம் என்று கடைகளில் அறிவிப்புப் பலகை எழுதி வைக்க வேண்டும் என்று வணிகர்களை வற்புறுத்தி இருக்கிறேன்.அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால்தான் பணம் கேட்டு மிரட்டல், வழிப்பறி போன்ற சம்பவங்கள் அதிகரித்து உள்ளன. எனவே வணிகர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். போலீஸ் கண்காணிப்பும் அதிகரிக்க வேண்டும் என்றார் வெள்ளையன்.மாமூல் கேட்டு சேதப்படுத்தப்பட்ட இனிப்புக் கடை மற்றும்  மஞ்சக்குப்பத்தில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட கடைகளை, வெள்ளையன் பார்வையிட்டார்.  வணிகர் சங்க மாநிலச் செயலாளர் கோபாலகிருஷ்ணன், நகர துணைச் செயலாளர் மதிசேகர் மற்றும் நிர்வாகிகள் எம்.கே.ராஜன், நூர்முகமது உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக